மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், குடும்பத் தகராறில் மனைவி மற்றும் குழந்தைகளை குளத்தில் வீசிய கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து எட்டு வயது சிறுவன் அளித்த தகவலால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை நிறுத்திய அந்த சிறுவன், தனது தந்தை தனது தாயையும், சகோதரியையும் தாக்கி குளத்தில் வீசியதாகக் கூறியுள்ளான். மேலும், தன்னையும் தண்ணீரில் வீசியதாகவும், ஆனால் குளத்திற்கு அருகிலுள்ள புதர்களைப் பிடித்துக்கொண்டு மூழ்கிவிடுவது போல் நடித்து உயிர் தப்பியதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
பின்னர், கிராமத்தை அடைந்த அவன், அங்கு வசிப்பவர்களுக்கு இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்துள்ளான். அந்தச் சிறுவனின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், சிறுவன் குறிப்பிட்ட குளத்திலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் 32 வயதான அனிதா மற்றும் அவரது சுமார் 11 வயது மகள் மஹி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த அனிதாவின் கணவரும், தேவாஸைச் சேர்ந்த ஓட்டுநருமான சுனில் செளஹான் என்பவரே இந்த கொடூர செயலைச் செய்துள்ளார். இவர்களுக்கு அடிக்கடி குடும்பத் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. முதற்கட்ட விசாரணையில், அனிதா செல்போனில் பலருடன் பேசுவதாக சுனில் செளஹான் சந்தேகமடைந்ததே இந்த கொலையைச் செய்யத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தம்பதியினரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், சுனில் செளஹான் தனது மனைவியையும் குழந்தைகளையும் குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அனிதாவின் சேலையின் முனையால் கழுத்தை நெரித்துக் கொன்று, பின்னர் கழுத்தில் கத்தியால் குத்தியதாகத் தெரியவந்துள்ளது. அதன்பின், குழந்தைகளையும் குளத்தின் ஆழமான பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சுனில் செளஹான் தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் அவர் அவ்வாறு செய்வதற்கு முன்பே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

