இல்லத்தரசிகள் தேசத்தை உருவாக்குபவர்கள் – உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி தீர்ப்பு!

சாலை விபத்துகளில் உயிரிழந்த இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை குறித்த முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இனி அவர்களின் உழைப்பிற்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 30,000 ரூபாய் இழப்பீடாக கணக்கிடப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் 2001 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் கணவர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களை வெறும் இல்லத்தரசிகள் என குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும், அவர்கள் தேசத்தை கட்டி எழுப்புபவர்கள் என்றும் நீதிபதிகள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளும், குடும்பத்தினருக்கு அவர்கள் வழங்கும் அரவணைப்பும் மறுக்க முடியாத பொருளாதார மதிப்பு கொண்டவை. வருங்கால தலைமுறையினரை வளர்த்து எடுப்பதிலும், மனித வளத்தை மேம்படுத்துவதிலும் அவர்களின் பங்கு அளப்பரியது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், இல்லத்தரசிகளின் ஊதியமில்லா வீட்டுப் பராமரிப்பு உழைப்பு மட்டுமே, 15 முதல் 17 சதவீதம் வரை பங்களிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பெண் வீட்டில் சமையல்காரராகவோ, பணிப் பெண்ணாகவோ பணியாற்றும்போது அவருக்கு ஊதியம் வழங்கப்பட்டு, அது நாட்டின் பொருளாதார கணக்கெடுப்பில் சேர்க்கப்படுகிறது. ஆனால், அதே வேலையை சம்பளம் இல்லாமல் செய்யும்போது, நாட்டின் பொருளாதார கணக்கெடுப்பில் அவரது பங்களிப்பு பூஜ்ஜியமாகி விடுகிறது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து, இனி விபத்து இழப்பீடுகளை கணக்கிடும் போது, அவர்களின் உழைப்பிற்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 30,000 ரூபாய் என மதிப்பீடு செய்து வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இது போன்ற வழக்குகளை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தினர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version