அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா இரண்டாவது முறையாக பதவியேற்பு

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றார். அவருடன் சேர்த்து மேலும் நான்கு பேர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 101 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில், பாஜக மட்டும் 81 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான போடோலாந்து மக்கள் முன்னணி மற்றும் அசாம் கன பரிஷத் ஆகியவை தலா 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதன் மூலம், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன், இக்கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் குவாஹாட்டியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்மா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவை சந்தித்த ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.

இந்தச் சூழலில், ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன், பாஜகவைச் சேர்ந்த ரமேஷ்வர் தெலி, அஜந்தா நியோக் ஆகியோரும், அசாம் கன பரிஷத்தைச் சேர்ந்த அதுல் போரா, போடோலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த சரண் போரா ஆகிய நான்கு பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இந்தப் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version