இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இரு வீரர்களைத் தேர்வு செய்வதில் அணி நிர்வாகம் வெவ்வேறு அளவுகோல்களைப் பின்பற்றுவதாக இந்திய டெஸ்ட் அணி வீரர் ஹனுமா விஹாரி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஹனுமா விஹாரி, சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இழைக்கப்படும் அநீதி குறித்துப் பேசியுள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கு முன் 5 போட்டிகளில் சரியாக ஆடாததால் சஞ்சு சாம்சன் தனது இடத்தை இழந்தார். பின்னர் அவர் மீண்டும் கம்பேக் கொடுத்து, 2026 டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல முக்கியக் காரணமாக இருந்ததுடன் தொடர்நாயகன் விருதையும் வென்றார். உலகக்கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடிய அவர் மூன்றிலுமே அரைசதம் அடித்தார். ஆனால், தற்போது இங்கிலாந்து தொடரில் சொதப்பியதாகக் கூறி ஜிம்பாப்வே தொடரில் அவர் நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டு உள்ளதாக தேர்வுக்குழுவினர் மழுப்புகின்றனர் என்று ஹனுமா விஹாரி கூறினார்.
அபிஷேக் ஷர்மாவின் மோசமான ஃபார்ம் குறித்து சுட்டிக்காட்டிய ஹனுமா விஹாரி, தொடர்ந்து சொதப்பி வரும் அபிஷேக் ஷர்மாவுக்கு மட்டும் ஏன் தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கடந்த 18 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் வெறும் 3 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். சமீபத்திய போட்டிகளில் அவரது ரன்கள் 49, 0, 59, 43, 10, 16, 3, 1, 8 என மிகவும் மோசமாக உள்ளது.
இங்கிலாந்து தொடரிலும் ஒரேயொரு அரைசதம் தவிர அவர் 20, 30 ரன்களைக் கூடக் கடக்கவில்லை. உலகக்கோப்பையிலும் அவரது அதிகபட்ச ரன் 16 மட்டுமே. அவரைப் பற்றி யாரும் ஏன் பேசுவதில்லை? என்றும் ஹனுமா விஹாரி தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், சஞ்சு சாம்சனை மட்டும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை எனக் கூறி நீக்குகிறார்கள். ஆனால் அபிஷேக் ஷர்மாவுக்கும் இதே நிலை தான். அபிஷேக் ஷர்மாவை விட சாம்சன் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். பிரப்சிம்ரன் சிங்குக்கு 10 போட்டிகள் கொடுத்தால் அவரும் 2 அரைசதங்கள் அடிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு அபிஷேக் ஷர்மா மீது எந்தத் தனிப்பட்ட கோபமும் இல்லை. ஆனால், இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சமமாக நடத்தப்பட்டு, ஃபார்மின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே என் விருப்பம் என ஹனுமா விஹாரி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். வீரர்களின் தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்தும், அபிஷேக் ஷர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுவது குறித்தும் ஹனுமா விஹாரி தனது யூடியூப் சேனலில் விரிவாகப் பேசியுள்ளார். இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரர்களின் தேர்வு நியாயமாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

