நீட் தேர்வு ரத்து: ஜெயலலிதா இருந்திருந்தால் தடுத்திருப்பார் – சசிகலா

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய நீட் தேர்வு, மே 3 அன்று நாடு முழுவதும் 5,432 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்நிலையில், வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறுதேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், ஆண்டு முழுவதும் கடுமையாக உழைத்த மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதா) அவர்கள் உயிருடன் இருந்திருந்தால், நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழைய விட்டிருக்க மாட்டார். அவரது ஆட்சிக் காலத்தில், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க அவர் மிகுந்த அக்கறை காட்டினார். நீட் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளைப் பாதிக்கும் என்பதால், அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர் முதன்முதலில் வலியுறுத்தினார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சசிகலா தனது பதிவில், 'ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடைமுறையில் இதுபோன்று குளறுபடிகள் ஏற்படுவது, சில மாணவர்கள் குறுக்கு வழியில் மருத்துவப் படிப்புகளில் சேர்கிறார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். புரட்சித்தலைவி அம்மா நம்மிடையே இல்லாததால், கிராமப்புற ஏழை மாணவர்கள் அவரை எண்ணி ஏங்குகின்றனர். எனவே, நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுதேர்வை எவ்வித குளறுபடியும் இன்றி நடத்த வேண்டும். கிராமப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து விரைந்து செயல்படுத்த வேண்டும்' என்றும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version