தமிழக சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தனித்துப் போட்டியிட்டது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, த.வெ.க., நாதக என நான்கு முனைப் போட்டி நிலவியது. எனினும், த.வெ.க. தலைவர் விஜய், இந்தத் தேர்தலில் த.வெ.க. மற்றும் திமுக-வுக்கு இடையில் மட்டுமே போட்டி என்று குறிப்பிட்டிருந்தார். தனது தேர்தல் பரப்புரைகளில் திமுக-வை அவர் கடுமையாக விமர்சித்தார். அதேபோல், மற்றக் கட்சியினரும் விஜய்யை விமர்சித்தனர். தேர்தல் முடிவுகள் வெளியானபோது, விஜய்யின் த.வெ.க. 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், விஜய் ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபித்தார். இதன் காரணமாக, நேற்று முன்தினம் அவர் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். விஜய்க்கு எதிராக, திமுக மற்றும் அதிமுக ஆகியவை அதிக இடங்களுடன் எதிர்க்கட்சிகளாக அமரவுள்ளன. தேர்தலில் கடுமையான வார்த்தைப் பரிமாற்றங்கள் இருந்ததால், இருவரும் எலியும் பூனையுமாக மோதிக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முதலமைச்சர் விஜய், மூத்த தலைவர்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்களைச் சந்திக்க முடிவு செய்தார். நேற்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு, அவர் பெரியார் திடலுக்கு வருகை தந்தார். அங்கு, கி. வீரமணியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். பின்னர், பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இரண்டாவதாக, முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வீட்டிற்குச் சென்றார். அவரை முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி கட்டித்தழுவி வரவேற்றார். பின்னர், மு.க. ஸ்டாலினைச் சந்தித்த விஜய்யை, அவரும் கட்டித்தழுவி வரவேற்றார்.
மூன்றாவதாக, மதிமுக தலைவர் வைகோவின் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவரை துரை வைகோ வரவேற்றார். வைகோவைச் சந்தித்துப் பேசிய விஜய், வைகோ தனது குடும்பத்தினரை அவருக்கு அறிமுகப்படுத்தியபோது, அவருடைய வீட்டில் பணிபுரியும் பெண் ஊழியர்களும் விஜய்யைச் சந்தித்தனர். அப்போது, ஒரு பெண் திருஷ்டி கழித்துச் சுடக்கு விட்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது. முதலமைச்சர் விஜய்யும் திருஷ்டி கழித்துச் சுடக்கு விட்டார்.
நான்காவதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார். அப்போது சௌமியா அன்புமணி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர். அன்புமணி தனது குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி வைத்தார்.
ஐந்தாவதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்குச் சென்றார். சீமான் அவரை ஆரத்தழுவி வரவேற்று, நினைவுப் பரிசு வழங்கினார். அதன் பிறகு, விஜய் தனது பனையூர் அலுவலகத்திற்குத் திரும்பினார்.
இன்று சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு முடிந்ததும், ஆறாவதாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அவருக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. அந்தக் கட்சியின் தலைவர்களுடன் மரியாதை நிமித்தமாகப் பேசினார்.
ஏழாவதாக, சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவரை வரவேற்றார். மற்ற தலைவர்களையும் விஜய் சந்தித்து உரையாடினார்.
எட்டாவதாக, அதிமுக-வில் உள்ள சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான குழுவினரைச் சந்தித்தார். அப்போது எஸ்.பி. வேலுமணி தனது அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
ஒன்பதாவதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சந்தித்தார். அப்போது திருமாவளவன், முதலமைச்சர் விஜய்க்கு நினைவுப் பரிசு வழங்கினார். பின்னர், இருவரும் வாசலில் கைகளை ஒன்றாக உயர்த்திப் பிடித்து, உற்சாகமாக மக்களை நோக்கி கை அசைத்தனர்.
அதனுடன் இன்றைய சந்திப்புகள் முடிவடைந்த நிலையில், விஜய் தனது பனையூர் அலுவலகத்திற்குச் சென்று த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அதில் வெற்றி பெற்ற பிறகு, மற்ற சில அரசியல் தலைவர்களையும் அவர் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

