பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. நரசிம்மன்: அண்ணாமலைக்கு ஆதரவு அறிவிப்பு

தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன் அறிவித்துள்ளார். தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான இவர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திராவிட கட்சிகளை வீழ்த்த அண்ணாமலை காட்டிய வழியை 2 ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்றியிருந்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடித்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய நரசிம்மன், கடந்த ஓராண்டாக தமிழக பாஜக சிறப்பாக செயல்படவில்லை என்றும், இது மிகுந்த வருத்தத்தை அளித்ததாகவும் கூறினார். தேர்தல் காலத்தில் கட்சிக்கு எதிராக பேசக்கூடாது என்ற நோக்கில் அமைதியாக இருந்து, தலைமை அளித்த பணியை செய்ததாகவும், ஆனால் தற்போது பாஜகவில் தொடர்ந்து பயணித்தால் பொதுமக்களுக்கு எந்த பணியையும் செய்ய இயலாது என்பதால் விலக தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளைத் தோற்கடித்து ஒரு இயக்கம் ஆட்சி அமைத்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இதே பணியை அண்ணாமலை தலைமையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டிருந்தால் இன்றைக்கு பாஜக ஆட்சிக்கு வந்திருக்கும் என குறிப்பிட்டார். எனவே, அண்ணாமலை எடுத்துள்ள முடிவை நானும், எனது பகுதியில் உள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏற்று, தமிழகம் மற்றும் மக்களை காப்பதற்கும், புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், அந்த மாற்றம் அண்ணாமலை தலைமையில் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு, அவருடன் பயணிக்கத் தயாராகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

மோடியின் மீது எந்த வருத்தமும் இல்லை என்றும், ஆனால் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணும்போது அண்ணாமலைக்கு ஈடாக யாரும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த இயக்கம் பாஜகவுக்கும், மோடிக்கும் எதிரானது அல்ல என்றும், அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் அச்சமின்றி இந்த இயக்கத்தில் இணைந்து வருகிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version