முன்னாள் மாவட்ட நீதிபதியையே குறிவைத்து, சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து 2 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் முன்னாள் மாவட்ட நீதிபதி கண்பத் சிங் பண்டாரி. கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி, அவருக்கு ஒரு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர், தன்னை மும்பையைச் சேர்ந்த சிபிஐ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், நீதிபதி கண்பத் சிங் தனது வங்கி கணக்கு மூலம் 50 கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் செய்துள்ளதாகவும், இதற்காக அவரை கைது செய்ய உள்ளதாகவும் மிரட்டியுள்ளார். இந்த விஷயம் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவிக்கக் கூடாது என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதையடுத்து, மற்றொரு நபர் வாட்ஸ்அப் மூலம் நீதிபதியை தொடர்பு கொண்டு, தன்னை ரிசர்வ் வங்கி மேலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஹவாலா பணம் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நீதிபதியின் நிதி முதலீடுகள் குறித்த விவரங்களைக் கேட்டுள்ளார். மிரட்டலுக்குப் பயந்துபோன நீதிபதி பண்டாரி, தனது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மற்றும் பிற நிதி ஆவணங்கள் தொடர்பான விவரங்களை அவர்களிடம் பகிர்ந்துள்ளார்.
விசாரணைக்கு உதவுவதாகக் கூறி, மோசடி கும்பல் நீதிபதியிடம் வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றுமாறு கூறியுள்ளது. இதை நம்பிய நீதிபதி, கடந்த மாதம் 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை, தனது எஸ்.பி.ஐ வங்கி கணக்கிலிருந்து 2 கோடியே 50 லட்சத்து 51 ஆயிரத்தை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். மேலும், அவரது பி.பி.எஃப் கணக்கில் உள்ள பணத்தையும் மாற்றும்படி மோசடி கும்பல் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது.
இதனையடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஜோஹரி பஜார் கிளைக்கு நீதிபதி பண்டாரி சென்றுள்ளார். அங்கு அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர், அவரிடம் இது குறித்து விசாரித்துள்ளார். அப்போதுதான், நீதிபதி மோசடி கும்பலிடம் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. வங்கி மேலாளர் உடனடியாக பணத்தை மாற்றுவதை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி பண்டாரி தனது உறவினர் ரவீந்திர சிங்கை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார். உடனடியாக ரவீந்திர சிங் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து, ஒரு முன்னாள் நீதிபதியிடமே இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற மோசடி கும்பலிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

