கடலூரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள், படகு பழுது காரணமாக 6 நாட்கள் கடலில் தத்தளித்த நிலையில், தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ரமேஷ், மனோகர், நாகவேல் ஆகிய இந்த மீனவர்கள், கடந்த மூன்றாம் தேதி கடலுக்குச் சென்றவர்கள் கரை திரும்பாததால் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
தாழங்குடா கடற்பகுதியில் சிக்கியிருந்த இவர்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். 6 நாட்களாக உணவின்றி தவித்ததாகவும், கடல் நீரையும், தங்கள் சிறுநீரையும் குடித்து உயிர் வாழ்ந்ததாகவும் மீட்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட மூவரும், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது இந்த அவல நிலை, கடலோரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடல் சீற்றம் மற்றும் படகு பழுது காரணமாக இத்தகைய துயர சம்பவங்கள் ஏற்படுவதாகவும், மீனவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

