கிழிந்த ஷாக்ஸ், ஷூக்கள்: உலகக்கோப்பை கால்பந்தில் வீரர்களின் வினோத காரணம்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் வீரர்கள் தங்கள் ஷாக்ஸ் மற்றும் காலணிகளில் மாற்றங்கள் செய்து விளையாடுவது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில், வீரர்கள் சிலர் தங்கள் ஷாக்ஸ் மற்றும் காலணிகளில் ஓட்டைகள் போட்டு விளையாடுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நட்சத்திர வீரர்கள் ஏன் இப்படி வினோதமாக விளையாடுகிறார்கள் என்பதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

விளையாட்டின் போது, வீரர்களின் கணுக்கால், பாதம் மற்றும் கெண்டைக்கால் தசைகளுக்கு ஆதரவளிக்கவும், ஷின் கார்டுகளை சரியான இடத்தில் நிலைநிறுத்தவும் ஷாக்ஸ்கள் மிகவும் இறுக்கமாக வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், இந்த அதீத இறுக்கம் சில வீரர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

போட்டியின் போது கால்களில் ஒருவித மரத்துப்போன உணர்வும், தசைப்பிடிப்பும் ஏற்படுவதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அழுத்தத்தைக் குறைத்து, தங்களுக்குத் தளர்வை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே பிரிட்டனின் ஜூட் பெல்லிங்ஹாம், புகாயோ சாகா மற்றும் கைல் வாக்கர் போன்ற முன்னணி வீரர்கள் தங்கள் ஷாக்ஸ்களின் பின்புறத்தில் ஓட்டை போடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த மாற்றங்கள் விரும்பிய பலனைத் தரும் என்பதற்கான அறிவியல் சான்றுகள் மிகவும் குறைவு என்று விளையாட்டு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 3CB பெர்ஃபார்மன்ஸ் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ராஜ் ப்ரார் கூறுகையில், போட்டிகளுக்குப் பிறகு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், கால்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் இறுக்கமான கம்ப்ரஷன் சாக்ஸ்களைப் பயன்படுத்துவதே மருத்துவ ரீதியாகச் சிறந்தது என்று கூறியுள்ளார்.

முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் கேரி நெவில் இந்த நடைமுறையை விமர்சித்துள்ளார். நிறுவனங்கள் ஏன் வீரர்களுக்குப் பொருத்தமான அளவுகளில் ஷாக்ஸ்களை தயாரித்து வழங்குவதில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது வீரர்களின் செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஷாக்ஸ்களைத் தவிர, சில வீரர்கள் தங்கள் கால்பந்து காலணிகளின் குதிகால் பகுதியிலும் துளைகளை இடுகின்றனர். புதிய காலணியை அணிந்து கொண்டு நீண்ட தூரம் ஓடும்போது, அது குதிகாலில் உராய்வை ஏற்படுத்தி கொப்புளங்களை உண்டாக்கலாம். இதிலிருந்து தப்பிக்கவும், குதிகால் பகுதியில் உள்ள அக்கில்லெஸ் தசைநார் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் வீரர்கள் காலணிகளின் பின் பகுதியை வெட்டுவதாகத் தெரிகிறது.

குதிகால் பகுதியில் ஏற்படும் இந்த அசௌகரியத்திற்கு ஹாக்லண்ட்ஸ் சிண்ட்ரோம் அல்லது பம்ப் பம்ப் என்று அழைக்கப்படும் ஒரு எலும்பு வளைவுப் பிரச்சனையும் முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர். தி இண்டிபெண்டண்ட் பார்மசி அமைப்பின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் டொனால்ட் கிராண்ட் கூறுகையில், மிகவும் இறுக்கமான காலணிகளை அணிவது, தொடர்ந்து வேகமாக ஓடுவது மற்றும் திசைகளைத் திடீரென மாற்றுவது ஆகியவற்றின் காரணமாகக் குதிகாலில் உள்ள தசைநார்களில் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. இதுவே ஹாக்லண்ட் நோய்க்குறிக்கு வழிவகுக்கிறது என்று கூறியுள்ளார்.

காலணிகளில் துளைகளை இடுவது உடனடி வலியைக் குறைக்கவும், உராய்வைத் தடுக்கவும் ஒரு தற்காலிக வழியாக உதவலாம். ஆனால், இது காயத்தைக் குணப்படுத்துவதற்கான முறையான வழி அல்ல என்றும், தகுந்த குதிகால் ஆதரவும் மெத்தை போன்ற அமைப்பும் கொண்ட சரியான அளவிலான காலணிகளை அணிவது மட்டுமே இதற்கு முழுமையான தீர்வைத் தரும் என்றும் அவர் மேலும் விளக்கியுள்ளார். இந்த வினோத நடைமுறைகள் கால்பந்து உலகில் ஒரு புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version