அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர்last-minute-ல் நீக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க கடைசி நேரத்தில் தயாராக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களுக்கு ஆதரவளித்ததாகக் கருதப்படும் அதிமுக நிர்வாகிகள் 26 பேரை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, நீக்கப்பட்டவர்களில் முக்கிய நபர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சி.வி. சண்முகம், அதிமுகவின் தற்போதைய தலைமை குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
"அதிமுக பலமுறை தோல்விகளைச் சந்தித்துள்ளது. ஆனால், ஒவ்வொரு முறையும் கட்சியை மீட்டெடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தகுதியும், திறமையும், ஜெயலலிதாவிடம் இருந்தது. 1996-ல் பெரும் தோல்வி ஏற்பட்டபோதும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு கட்சியை மீண்டும் வெற்றி பெற வைத்தார். வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பாவிப்பவரே உண்மையான தலைவர். தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அரவணைத்துச் செல்பவரே தலைவர். ஆனால், வெற்றி பெற்றால் தன்னால் வெற்றி என்றும், தோல்வி அடைந்தால் நிர்வாகிகளைப் பழிபோடும் தலைமை அதிமுகவில் உள்ளது. ஜெயலலிதா கௌரவம் பார்க்காதவர். வீடு தேடி வந்தவர்களை, அரை சதவீதம், ஒரு சதவீதம் எனக்கூறி, 210 தொகுதிகளில் வெற்றிப்பெறுவேன் எனக்கூறி ஒரு ஏசி அறையில் அமர்ந்துகொண்டு வந்த தலைவர்களை விரட்டியடித்தார். ஆனால், இன்றைய தலைமை அப்படியில்லை" என அவர் கடுமையாக விமர்சித்தார்.
"கடைசி நேரத்தில்கூட தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க தயாராக இருந்தது. அவர்களுடன் கூட்டணி வைத்தால் மிகப்பெரிய வெற்றி பெறலாம் என நாங்கள் கூறினோம். ஆனால், எங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, 'எனக்குத் தெரியும்' என தலைமை கூறியது. 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என நாங்கள் கூறியபோதும், 'வேண்டாம்' என்றார். தேர்தலின் முடிவில் பெரும் தோல்வி ஏற்பட்டது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் திடீரென்று அமித் ஷா வீட்டிற்குச் செல்கிறோம் எனக்கூறி, தன்னிச்சையாக கூட்டணியை அறிவித்தார். யாரைக் கேட்டார்? யாரோடும் கலந்தாலோசிக்கவில்லை. இன்றுவரை அதற்கான காரணத்தையும் சொல்லவில்லை. தே.மு.தி.க.வை இணைக்கக் கூறினோம். வாக்குறுதிப்படி அவர்களுக்கு எம்பி சீட் கொடுக்கச் சொன்னோம். எங்கள் கருத்தை உதாசீனப்படுத்தினார். அப்போதும் அவர்கள் கூட்டணியில் சேர வந்தார்கள், ஆனால் சேர்க்கவில்லை. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என நாங்கள் தான் சொன்னோம். அவரைப் பொதுச்செயலாளராக அறிவித்தோம். நாங்கள் எடுத்த முடிவுக்காக இப்போது அனுபவிக்கிறோம்" என்றார்.
"கடந்த 4 ஆண்டுகளில் பொதுச்செயலாளர் செய்த ஒரே பணி, நீக்குவது, நீக்குவது, நீக்குவது மட்டும்தான். ஒன்று சிறைவாசம் அல்லது வனவாசம். கேள்வி கேட்டால் கட்சியில் இருந்து நீக்கிவிடுகிறார். அவர் இன்று நீக்கிய அனைவரும் சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. உண்மையான தொண்டர்கள் மத்தியில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்" என்று சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

