இந்தியாவில் பொருளாதார சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இது கட்டுக்கடங்காமல் போனால் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்படும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'உலக சமத்துவமின்மை ஆய்வகம்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள '2026 உலக சமத்துவமின்மை' அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த செல்வத்தில் 40 சதவீதம் வெறும் ஒரு சதவீத மக்களிடம் குவிந்துள்ளது. உலகிலேயே பொருளாதார சமத்துவமின்மை அதிகம் உள்ள நாடாக இந்தியா திகழ்வதாகவும் அந்த அறிக்கை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நாட்டின் மொத்த வருமானத்தில் 58 சதவீதம் 10 சதவீத மக்களுக்கும், வெறும் 15 சதவீதம் மட்டுமே 50 சதவீத மக்களுக்கும் செல்வதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. வருமானம், செல்வம், பாலினம் என மூன்று முக்கிய பரிமாணங்களிலும் இந்தியாவில் சமத்துவமின்மை ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும், இது சமத்துவம் மற்றும் சமூக நீதியை விரும்புவோருக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாகவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய அரசே ஒப்புக்கொண்ட தகவலின்படி, 2025-2026ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டியவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. இது 2021-2022ஆம் ஆண்டில் 142 ஆக இருந்தது. அதாவது, வெறும் ஐந்து ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சியானது, அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கான ஆட்சியாகவே இருந்து வருவதாக மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். மோடி ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகவும் மாறி வருவதாகவும், நடுத்தர மக்கள் தங்கள் வாங்கும் சக்தியை இழந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, 2014ஆம் ஆண்டில் சுமார் 44,000 கோடி ரூபாயாக இருந்த அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு, தற்போது சுமார் 7.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த சொத்து குவிப்பில் அதானி குழுமத்திற்கு உதவியதுதான் மோடி அரசின் ஒரே சாதனையாகும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
பல்வேறு மதங்கள், ஜாதிகள், மொழிகள், இனங்கள், கலாசாரங்கள் கொண்ட இந்தியாவில், பொருளாதார வளர்ச்சி சமச்சீராக இருக்க வேண்டும். ஆனால், ஒரு சதவீத மக்களிடம் 40 சதவீத செல்வம் குவிந்திருப்பது மிகப்பெரிய சமூக அநீதி என்றும், இது ஆட்சி நிர்வாகத்தின் மிகப்பெரிய தோல்வி என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதற்காக மோடி அரசு வெட்கப்பட வேண்டும் என்றும், இந்த அவலத்திற்கு ஏழைகள் நலனில் அக்கறை இல்லாத வலதுசாரி மனப்பான்மையே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார சமத்துவமின்மையை சிலிண்டருக்குள் அடைக்கப்பட்ட எரிவாயுவுடன் ஒப்பிட்டுள்ள மாணிக்கம் தாகூர், அளவுக்கு அதிகமானால் அது வெடித்து சிதறிவிடும் என்று எச்சரித்துள்ளார். பொருளாதார சமத்துவமின்மை தொடர்ந்தால், மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்படும் என்றும், அதானி, அம்பானிக்காக ஆட்சி நடத்தும் மோடி அரசை மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் சமச்சீரான வளர்ச்சி ஏற்பட, நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்றும், அது விரைவில் நடக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

