தொடர்ந்து பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் பேரம் பேசி, பல்வேறு துறைகளைப் பெற்றபோதும், காவிரி விவகாரத்தில் ஒரு அமைச்சர் பதவியையாவது திமுக உதறி இருக்கிறதா என்று தவெக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது. திமுகவை சுயநல இயக்கம் என்று விமர்சித்துள்ள தவெக, மக்களின் நலனுக்காகச் செயல்படுவதுதான் உண்மையான மக்களாட்சி என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'விவசாயிகள் நலன்களுக்காகவும், கர்நாடகத்தில் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் சிந்தித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி. திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித் தலைவர். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக?' என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், 'அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக. ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும். எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது.' என்றும் விமர்சித்துள்ளது.
கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் தவெக ஐடி விங் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, காவிரிப் பிரச்சனையில் திரு. ஸ்டாலின் அவர்களின், திமுக ஆட்சி போய்விட்டதே, தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும் என்றும், அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும் என்றும், இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை என்றும் தவெக ஐடி விங் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

