சென்னை: முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கார் வழங்கும் திட்டத்தை திமுகவின் 59 சட்டமன்ற உறுப்பினர்களும் ஏற்க மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவைக் குறைக்கும் நோக்கில், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு மட்டுமே இந்த வாகனத்தை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "முதலமைச்சர் விஜய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆனால், திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த வாகனங்களைப் பெறுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். அரசின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இந்த வாகனங்களை வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல உங்கள் மூலமாக இந்தக் கடிதத்தை வழங்குகிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும், "கார் இல்லாத உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் கொடுக்கலாம். ஆனால், எங்கள் உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு" என்றும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அமைச்சர்களுக்கு கார், வீடு, 4 உதவியாளர்கள் வழங்கப்படுகின்றனர். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அப்படி இல்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினர் மூன்று லட்சம் மக்களைச் சென்று பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. அதனால்தான் கார் வழங்குகிறோம். தேர்தலுக்குப் பிறகு எங்கள் தொகுதிக்கு எம்.எல்.ஏ. வரவே இல்லை என்று மக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். அரசு வாகனம் வழங்கப்பட்ட பிறகு, எம்.எல்.ஏ.க்களிடம் நாம் கேள்வி கேட்கலாம். அதேபோல், தொகுதி மக்களும் தங்கள் எம்.எல்.ஏ.விடம் கேள்வி கேட்க முடியும்" என்று விளக்கினார்.
முதலமைச்சராக இருக்கும் ஒருவர், எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவது தொடர்பான அறிவிப்பை அனைவருக்கும் சமமாகத்தான் வெளியிடுவார். அந்தக் காரை ஏற்க விருப்பமில்லாதவர்கள், 'எங்களுக்கு கார் தேவையில்லை' என்று தெரிவித்துவிடலாம் என்றும் அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ குளி ராமசந்திரன், "கார் இல்லாத உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் கொடுக்கலாம். எங்கள் உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு" என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, சட்டமன்ற உறுப்பினர்களின் வாகனத் தேவைகள் மற்றும் அரசு செலவினங்கள் குறித்த விவாதத்தை சட்டப்பேரவையில் எழுப்பியுள்ளது. திமுகவின் இந்த முடிவு, அரசின் நிதி நிர்வாகத்தில் ஒரு புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

