கோவில்பட்டியில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, கடந்த 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் கடந்த 22-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சட்ட முரண்பாடுகளுக்கு எதிரானது என்றும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, நீதிபதி எஸ்.சுபாதேவி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து சில விளக்கங்களைக் கேட்டு, ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று (வியாழக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், தற்போது கைது செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

