லண்டன் புறப்பட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: நிர்வாக சீரமைப்புக்கு குழு அமைப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகத்தை மறுசீரமைக்கும் பணிகளைத் தொடர்ந்து, இன்று லண்டன் புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்லும் அவர், அங்கிருந்து லண்டன் செல்கிறார். இந்தப் பயணத்திற்கு முன்னதாக, திமுக தொண்டர்களுக்கு 'உற்சாக' கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.

தனது கடிதத்தில், தேர்தல் தோல்வியால் தான் துவண்டுவிடவில்லை என்றும், தொண்டர்களின் உற்சாகமும் ஊக்கமும்தான் தனக்கு பெரும் பலம் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பணியே மகத்தானது என்றும், மக்களுக்காக உழைப்பதே கடமை என்றும் அண்ணா, கருணாநிதி ஆகியோர் கற்றுக்கொடுத்ததை நினைவு கூர்ந்தார். கட்சி தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்திற்கு தினமும் வருவதாகவும், அங்குள்ள அறிவாலயத்தின் வாயில் தன்னை வரவேற்று ஊக்கமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொண்டர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் தான் தினமும் கேட்டறிவதாகவும், 'நாங்க இருக்கோம். நாம மீண்டும் வருவோம்' என்ற அவர்களின் வார்த்தைகளே எதிரிகளை வீழ்த்தும் வலிமையைக் கொடுப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். 75 ஆண்டுகளைக் கடந்தும் திமுக கம்பீரமாக நிற்பதற்குக் காரணம் தொண்டர்களின் இந்த வலிமைதான் என்றும், வெற்றியைத் தலையில் ஏற்றிக்கொள்ளாமலும், தோல்வியை இதயத்தில் தாங்கிக்கொள்ளாமலும் ஃபீனிக்ஸ் பறவையென மீண்டெழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற இயக்கங்கள் ஒரு தோல்வியைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், திமுகவினர் கொள்கை உறவாலும், உடன்பிறப்பு நேசத்தாலும் பிணைக்கப்பட்டு ஒரு குடும்பமாக வேரூன்றி வளர்ந்து நிற்பதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். திமுக அடுத்த நூறாண்டுகளுக்குப் பயணிக்க வேண்டிய திசையைத் தீர்மானிக்க வேண்டியதும், தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி புதிய பாதையை அமைக்க வேண்டியதும் தலைமைத் தொண்டனான தனது கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக, 38 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்து, ஒவ்வொரு தொகுதியாகச் சென்று தொண்டர்களின் கருத்துக்களை அறிந்து வந்து தன்னிடம் வழங்கும்படி கூறியுள்ளதாகவும், மேலும், தொண்டர்களின் குரல் ஒலித்திட 'உடன்பிறப்பின் குரல்' என்ற இணையதளத்தையும் உருவாக்கியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொண்டர்கள் தங்கள் எண்ணங்களை உரிமையோடும் அக்கறையோடும் தெரிவித்ததாகவும், அவர்கள் தந்த கருத்துக்களின் அடிப்படையில் கழகத்தின் மறுசீரமைப்பு, மறுகட்டுமானம், இளமையும் அனுபவமும் கலந்த 'மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு'வையும் அமைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

திமுகவைப் போல் அமைப்பு ரீதியான பலம் கொண்ட கட்சி இந்தியாவில் வேறு இல்லை என்று பல்வேறு மேடைகளில் கூறியுள்ளதை நினைவு கூர்ந்த ஸ்டாலின், பிற கட்சித் தலைவர்கள், அரசியல் நோக்கர்களும் இதை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய பலம் கொண்ட அமைப்பு மலையென நிற்க வேண்டும், கதிரவன் என ஒளி வீச வேண்டும் என்றும், அந்த ஒளியில் அடுத்த நூற்றாண்டுக்கான வரலாற்றையும் தமிழ்நாட்டின் புது வரலாற்றையும் எழுத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பணிகளை எல்லாம் ஒப்படைத்துள்ள நிலையில்தான், தான் இன்று அயலகப் பயணம் மேற்கொள்வதாகவும், இரு வாரங்கள் அயலகத்தில் இருந்தாலும், தனது மனம் அறிவாலயத்திலும், அங்கு நாள்தோறும் வரும் தொண்டர்களின் முகங்களிலும் தான் இருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version