தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு தகவல், திமுக மற்றும் பாஜக இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பாஜக எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வரும் திமுக, தற்போது இந்த விவகாரத்தில் பாஜகவின் திட்டங்களுக்கு மறைமுகமாக வழிவிடுகிறதா என்ற சந்தேகம் டெல்லி வட்டாரங்களில் எழுந்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மாநிலத்தில் புதிய அரசியல் சமன்பாடுகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, தவெக அரசுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அதிருப்தியடைந்த திமுக, 'இந்தியா' (INDIA) கூட்டணியின் கூட்டங்களைப் புறக்கணித்து வருகிறது. இந்தச் சூழலைப் பாஜக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தீவிரமாக முயன்று வருவதாகத் தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் ஒரு முக்கிய மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற, பாஜகவிற்கு திமுகவின் ஆதரவு அல்லது மறைமுக ஒத்துழைப்பு அவசியமாகியுள்ளது. தொகுதி மறுவரையறையைத் தீவிரமாக எதிர்த்து வந்த திமுக, திடீரென அதனை ஆதரித்தால், அது தங்களின் திராவிடக் கொள்கைகளுக்கும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கும் துரோகம் இழைத்ததாக மாறிவிடும் என்று அஞ்சுகிறது.
இதற்காகவே, நாடாளுமன்றத்தில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெறும் நாளில், திமுக எம்பிக்கள் மசோதாவை எதிர்த்துப் பேசிவிட்டு, வாக்கெடுப்பைப் புறக்கணித்து 'வெளிநடப்பு' செய்ய வேண்டும் என்ற ரகசிய உத்தியை பாஜகவே திமுகவிற்கு யோசனையாகக் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக வெளிநடப்பு செய்வதன் மூலம் அவையின் ஒட்டுமொத்த பலம் குறைந்து, பாஜகவிற்கு மசோதாவை எளிதாக நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மை கிடைத்துவிடும் என்பதே இந்த 'மறைமுக டீலின்' பின்னணி என்று விபரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக 50% அளவில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் சமாதானம் கூறப்பட்டாலும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் வட மாநிலங்களை விடக் குறையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இது குறித்த அச்சம் நிலவுகிறது.
'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை' என்ற தத்துவத்தின் அடிப்படையில், பாஜகவின் குடையின் கீழ் திமுக ஒதுங்க நினைத்தால், அது தமிழகத்தில் கட்சியின் எதிர்கால அரசியலையும் வாக்கு வங்கியையும் கடுமையாகப் பாதிக்கும் என்று திமுகவின் மூத்த தலைவர்கள் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் திமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் ஆவலுடன் காத்திருக்கிறது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

