சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை வாங்குவதில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கும், அணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இரு தரப்பிற்கும் இடையே மனக்கசப்பு நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிஎஸ்கே அணி தொடங்கப்பட்ட காலம் முதல் அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் தோனி. அவரது தலைமையில் சிஎஸ்கே அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
தற்போது 45 வயதை எட்டியுள்ள தோனி, ஓய்வு பெறும் தருவாயில் உள்ளார். இந்த சூழலில், சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்குவதன் மூலம், அணியின் உரிமையாளர்களில் ஒருவராக ஆக வேண்டும் என தோனி விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர் பங்குகளை இலவசமாக கேட்காமல், உரிய பணத்தை செலுத்தி வாங்கவே ஆர்வம் காட்டியுள்ளார்.
ஆரம்பத்தில், தோனி சிஎஸ்கே அணியில் 25 சதவீத பங்குகளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அணி நிர்வாகம் வெறும் 3 சதவீத பங்குகளை மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. பின்னர், தோனி தனது கோரிக்கையை 20 சதவீதமாகக் குறைத்துக் கொண்டபோதும், நிர்வாகம் 4 சதவீத பங்குகளை மட்டுமே தர சம்மதித்துள்ளது.
இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில், தோனி 18 சதவீத பங்குகளுக்கு இறங்கி வந்த நிலையிலும், சிஎஸ்கே நிர்வாகம் அதிகபட்சமாக 5.5 சதவீத பங்குகளை மட்டுமே வழங்க முடியும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது. எழுத்துப்பூர்வமாக இல்லாமல், வாய்மொழியாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், தோனிக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த உறவில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளாக வீரர்கள் தேர்வு தொடர்பான முக்கிய முடிவுகளில் தோனியிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்ற அதிருப்தியும் நிலவி வந்துள்ளது. இந்த சூழலில், 18 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கும் சமீபத்தில் அணியை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.
காயம் காரணமாக, தோனி 2026 ஐபிஎல் தொடர் முழுவதிலும் விளையாடவில்லை. 19 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரின் ஒரு சீசன் முழுவதையும் அவர் தவறவிட்டது இதுவே முதல் முறையாகும். கடந்த 2008 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தோனி, 278 போட்டிகளில் பங்கேற்று 38.30 சராசரியுடன் 5,439 ரன்கள் குவித்துள்ளார். இதில் 24 அரைசதங்களும் அடங்கும்.
கடந்த 2013 சீசனில் 461 ரன்கள் குவித்து அசத்திய தோனி, அப்போது தனது தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக 84 ரன்கள் அடித்திருந்தார். மேலும் 2024 சீசனில் 11 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 220.54 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்தார். முன்னதாக கடந்த 2025 சீசனில் தோனி 14 போட்டிகளில் விளையாடி 196 ரன்கள் எடுத்திருந்தார்.
சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான இந்த இழுபறி காரணமாக, தோனி மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா அல்லது முற்றிலும் ஓய்வு பெறுகிறேன் என அறிவிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தோனி ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக இருப்பார் எனப் பலரும் கூறி வரும் நிலையில், இனி அது சாத்தியமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

