தலித் பெண்கள் வலிமையானவர்கள்: ரூத் மனோரமா உரை

பெங்களூருவில் நடைபெற்ற தேசிய தலித் மகளிர் கருத்தரங்கில், மனித உரிமை செயற்பாட்டாளர் ரூத் மனோரமா அவர்கள் ஆற்றிய உரை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 'தலித் பெண்கள் மூங்கிலை போல மென்மையாக வளைந்து கொடுக்கக் கூடியவர்கள் என்றாலும், அவர்கள் ஒருபோதும் பலவீனமானவர்கள் இல்லை' என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தேசிய தலித் மகளிர் கூட்டமைப்பின் சார்பில் 'தலித் பெண்ணிய சகோதரத்துவ கருத்தரங்கம்' மே 14 அன்று பெங்களூருவில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த மாநாடு மே 19 வரை நடைபெற உள்ளது. இதில் மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூத் மனோரமா, ஜோதி ராஜ், பிரியங்கா சாமி ஆகியோர் மட்டுமின்றி, நேபாளத்தைச் சேர்ந்த தலித் பெண்ணிய செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர்.

கடந்த 50 ஆண்டுகளாக தலித் பெண்கள் கூட்டமைப்பை தேசிய அளவில் நடத்தி வருவதாகவும், சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான அமைப்புகளை உருவாக்குவதிலும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடுவதிலும் இந்த அமைப்பு மிகுந்த சவால்களுக்கு மத்தியில் உறுதியாகச் செயல்பட்டு வருவதாகவும் ரூத் மனோரமா தனது உரையில் குறிப்பிட்டார். தலித் பெண்கள் ஆணாதிக்கம், சாதி கொடுமை, வன்முறை, புறக்கணிப்பு எனப் பல தளங்களில் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இவர்களை ஒருங்கிணைத்து பாபாசாகேப் அம்பேத்கரின் வழியில் பயணிக்கச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்வியை ஊட்டி, போராட்டம் நடத்தி, அனைவரையும் ஒன்றிணைத்து வலுவான சக்தியாக மாற்றி வருவதாகக் கூறிய ரூத் மனோரமா, 'தலித் பெண்கள் ஒருபோதும் பலவீனமானவர்கள் இல்லை, அவர்கள் மிகவும் வலிமையானவர்கள். மூங்கில் போன்று வளைந்து கொடுத்தாலும், ஒருபோதும் முறிந்துவிட மாட்டார்கள். எனவே, தலித் பெண்களை அமைப்புகளாக உருவாக்கி, புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு சமூக மாற்றத்துக்கு உழைக்க வேண்டும்' என அழைப்பு விடுத்தார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version