சந்தைகளில் 'நாட்டுக் கோழி முட்டை' என்ற பெயரில் விற்கப்படும் முட்டைகள் உண்மையில் சோனாலி கோழி முட்டைகளாக இருக்கலாம் என கோழி வளர்ப்பு ஆர்வலர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது நுகர்வோர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிராமப்புறங்களில் இயற்கையான சூழலில், புழு, பூச்சிகள் மற்றும் தானியங்களை உண்டு வளரும் நாட்டுக் கோழிகளின் முட்டைகளுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. இந்த முட்டைகளில் சத்துக்கள் பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக உடல் எடையை அதிகரிக்க விரும்புவோருக்கும், உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம் என்றும் கூறப்படுகிறது.
நாட்டுக்கோழி முட்டைகளில் கோலின் மற்றும் வைட்டமின் பி12 சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இவை மூளைச் செல்களைத் தூண்டி, ஞாபகசக்தியை மேம்படுத்தவும், கண் பார்வை திறனை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுவதாக நம்பப்படுகிறது. இந்த காரணங்களால், பலர் நாட்டுக்கோழி முட்டைகளை விரும்பி பயன்படுத்துகின்றனர். மருத்துவ ரீதியாகவும் இதன் நன்மைகள் குறிப்பிடப்படுகின்றன.
இந்நிலையில், நாம் கடைகளில் வாங்கும் நாட்டுக்கோழி முட்டைகள் உண்மையில் நாட்டுக்கோழி முட்டைகள் அல்ல என்றும், அவை சோனாலி கோழி முட்டைகள் என்றும் கோழி வளர்ப்பு ஆர்வலர் ஒருவர் தனது வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். சோனாலி கோழிகள், நாட்டுக்கோழிகளை விட அழகாகவும், விலை குறைவாகவும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சோனாலி கோழிகள் மூன்று மடங்கு அதிக முட்டையிடும் திறன் கொண்டவை என்றும், அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சோனாலி கோழி முட்டைக்கும், நாட்டுக்கோழி முட்டைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வெளிப்புறத் தோற்றத்திலோ அல்லது உடைத்து தோசைக் கல்லில் ஊற்றிப் பார்த்தாலோ கண்டறிய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'சோனாலி கோழியின் முட்டை வெறும் 8 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படும். ஆனால், அதை நாட்டுக்கோழி முட்டை என்று கூறி 30 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இது நுகர்வோரை ஏமாற்றும் செயலாகும். நாட்டுக்கோழி விற்பனையாளர்கள் அதை பொதுவாக விற்பனைக்கு வைப்பதில்லை. நமக்கு மருத்துவத் தேவைக்காக இருந்தால் மட்டுமே தருவார்கள். எனவே, நீங்கள் நாட்டுக்கோழி முட்டை என்று ஏமாற விரும்பினால், அதற்கு பதிலாக பிராய்லர் கோழி முட்டைகளையே பயன்படுத்தலாம்' என்று அந்த ஆர்வலர் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த தகவல், முட்டை வாங்கும் நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரமான மற்றும் உண்மையான நாட்டுக்கோழி முட்டைகளை வாங்குவது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வை இது ஏற்படுத்தியுள்ளது.

