கோவை அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் சடலம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள மஞ்சுப்பள்ளம் காட்டுப்பகுதியில், அரை நிர்வாண நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் புதருக்குள் கிடப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக கோவை மாநகர தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டனர். சடலம் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதால், உடலில் வெளிப்படையான காயங்கள் உள்ளதா என்பதை உடனடியாக கண்டறிய முடியவில்லை.

சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் மற்றும் கைவிரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் ஓடிவிட்டு யாரையும் கவ்விப் பிடிக்காமல் திரும்பியது. கைவிரல் ரேகை நிபுணர்கள் பெண்ணின் உடலில் தடயங்கள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்தனர். பின்னர், உடற்கூறாய்வுக்காக சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால், வழக்கு மதுக்கரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணிற்கு சுமார் 25 வயது இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அவரது ஒரு கையில் ‘ஜெகன்’ என்ற பெயரும், அருகே இதய வடிவமும் பச்சை குத்தப்பட்டுள்ளது. மற்றொரு கையில் ‘எஸ்’, ‘ஜெ’ ஆகிய ஆங்கில எழுத்துக்களும் பச்சை குத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டதால், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version