கூலி உயர்வு இழு இழுப்பு: விசைத்தறியாளர்கள் கோரிக்கை

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் கூலி உயர்வு விவகாரத்தால், விசைத்தறியாளர்கள் சட்டப் பாதுகாப்புடன் ஒப்பந்த கூலியை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் குடும்பங்கள் விசைத்தறி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றன. 1990 முதல் 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி ஒப்பந்தம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஜவுளி உற்பத்தியாளர்களிடம் உரிய கூலி கேட்டு விசைத்தறி உரிமையாளர்கள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் பூபதி கூறுகையில், 'கடந்த 2011-ம் ஆண்டு முதல் எங்களுக்கு உரிய கூலி கிடைப்பதில்லை. ஒப்பந்தப்படி கூலி உயர்த்தப்பட்டாலும், சந்தை நிலவரம் சரியில்லை எனக் கூறி பழைய கூலியே வழங்கப்படுகிறது. ஒரு மீட்டர் துணிக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை கூலி வழங்க வேண்டும். ஆனால், தற்போது மீட்டருக்கு 25 பைசா முதல் 50 பைசா வரை குறைத்து வழங்குகின்றனர். இதனால், பல லட்சம் மீட்டர் துணி உற்பத்தியில் ஈடுபடும் விசைத்தறியாளர்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அரசு உரிய கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்' என்றார்.

மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்ட நெசவுக்கூலி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் சில ஜவுளி உற்பத்தியாளர்கள் மறுப்பதாகவும், சட்டப் பாதுகாப்புடன் ஒப்பந்தக் கூலியை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர்களின் சம்பள உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளதாகவும், வேறு தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version