தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தொகுதி மறுவரையறை தீர்மானம் தொடர்பாக, உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இந்த தீர்மானம், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் மறுவரையறை, அத்துடன் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பும் இந்த விவகாரம் குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 12.8.2026 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாகத் தொடர வேண்டும் என்றும், மாநிலங்களுக்கிடையேயான தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாச்சாரப் பகிர்வைப் பாதுகாக்கவும், மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இடையேயான 2.2:1 என்ற விகிதத்தைப் பேணவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தேவையான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பகிர்வை நிர்ணயம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் பின்னணியில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 39-ஆகக் குறைக்கப்பட்டது போன்று, மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின்னர், அரசியலமைப்பின் 81(2)(a)-ஆம் சட்டப்பிரிவைப் பின்பற்றி தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் கணிசமான நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்க நேரிடும் என்று சட்டமன்றப் பேரவையில் விவாதிக்கப்பட்டது.
மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியை எய்தி, சிறப்பான சுகாதார மற்றும் பொதுநலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு, 1971-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டு, தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் எந்தவொரு மறுவரையறை நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக அமையும் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தீர்மானத்தில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும், அதாவது மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இடப் பகிர்வு முறை தொடர வேண்டும், மற்றும் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தல்களிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை இணைத்துள்ளதாகவும், இத்தீர்மானத்தைப் பரிசீலித்து, இது தொடர்பான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக் கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதோடு, பெண்களுக்கும் அரசியலில் சம வாய்ப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

