கடந்த ஆண்டு கரூரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோக சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்திருந்தார்.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 நபர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நேரில் வழங்கினார். இந்த நிகழ்வு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தங்களது குடும்பத்தின் ஆதாரமாக இருந்தவர்களை இழந்து தவிக்கும் சூழலில், முதலமைச்சர் விஜய் வழங்கிய இந்த அரசு வேலை வாழ்நாளில் ஒரு மிகப்பெரிய ஆறுதலாகவும், மறுவாழ்வாகவும் அமைந்துள்ளது என்று பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இது அவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்த நெரிசல் விபத்தில் உயிரிழந்த ஞானாம்பாள் என்பவரின் மகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த ஞானாம்பாள், கண்ணீர் மல்க தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். முதலமைச்சர் விஜய் செய்துள்ள இந்த உதவியின் மூலம் அவரை தனது மகனாகவே பார்ப்பதாக உருக்கமாகக் கூறினார்.
இது குறித்து ஞானாம்பாள் மேலும் கூறுகையில், 'எனக்கு அரசு வேலை தருவதாக கூறினார்கள். நான் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். எனது வயதும் 50 ஆகிறது. எனவே, எனது மகளுக்கு அரசு வேலை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்றுக்கொண்டு எனது மகளுக்கு அரசுப்பணி வழங்கி உள்ளனர். எனது மகள் என்னை கடைசி வரை பார்த்துக் கொள்வாள். எனது மகள் டிகிரி முடித்துள்ளார்' என்று தெரிவித்தார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு கருதி விஜய் வரவில்லை என்றும், இப்போது முதல்-அமைச்சராக அவர் வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஞானாம்பாள் குறிப்பிட்டார். இதேபோல், கரூர் நெரிசலில் உயிரிழந்த முருகேசன் என்பவரது மனைவி ரேவதி என்பவரின் மகனுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து முருகேசன் கூறும்போது, 'எனது மகனுக்கு அரசு வேலை தருவது ஆறுதல் அளிக்கிறது. கடைசி வரை எங்களை நன்றாக பார்த்துக் கொள்வதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். அவரையும் நாங்கள் கடைசிவரை பார்த்துக் கொள்வோம்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய் கரூருக்கு வருகை தந்தது குறித்து பொது மக்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துக்களை தெரிவித்தனர். ஒரு கட்சியின் தலைவராக கரூருக்கு வந்திருந்த விஜய், தற்போது தமிழகத்தின் முதல்-அமைச்சராக அரியணையில் அமர்ந்து அடியெடுத்து வைப்பது தங்களுக்கு கிடைத்த பெருமை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
விஜய் பிரசாரத்துக்கு வரும்போது போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விழா நடக்கும் இடம் முழுவதும் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பதை பார்க்கும்போது பெருமையாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த அரசு விழா, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கரூருக்கும் ஒரு நம்பிக்கையூட்டும் நிகழ்வாக அமைந்தது.

