காஞ்சிபுரம் மாவட்டம், தமிழகத்தின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்குள்ள ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, மாம்பாக்கம், வல்லம்-வடகால் போன்ற சிப்காட் தொழிற்பேட்டைகளில் ஆட்டோமொபைல், மின்னணு உற்பத்தி, கண்ணாடி தயாரிப்பு, இயந்திர உற்பத்தி என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில், மாம்பாக்கத்தில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் விஜய் இன்று திடீரென வருகை தந்தார். தொழிற்சாலையின் உற்பத்திப் பிரிவுகள், நவீன தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு நடைமுறைகள், உற்பத்தி செயல்முறைகள் ஆகியவற்றை அவர் நேரில் பார்வையிட்டு விரிவாக ஆய்வு செய்தார். மேலும், தொழிற்சாலையின் உற்பத்தித் திறன், ஏற்றுமதி நடவடிக்கைகள், எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள், தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள் குறித்தும் நிறுவன நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, நிறுவன வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை முதல்வர் வலியுறுத்தினார். மேலும், கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டிருந்த நினைவுப் பலகையில் தனது கையெழுத்தையும் பதிவு செய்தார். தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களைச் சந்தித்து கலந்துரையாடிய அவர், அவர்களுடன் நினைவுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியே திரண்டிருந்த பொதுமக்களும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செயின்ட்-கோபைன் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய், தொழிலாளர்களின் பாதுகாப்பு, தொழிலாளர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், தொழில்நுட்ப மேம்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட செயின்ட்-கோபைன் நிறுவனம், 350 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டது. இந்தியாவில் கட்டுமானம், வாகன உற்பத்தி, உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற துறைகளுக்குத் தேவையான உயர்தர கண்ணாடி தயாரிப்புகளை வழங்கி வருகிறது.
இந்தத் தொழிற்சாலையில் கட்டிடங்களுக்கான ஃப்ளோட் கண்ணாடி, ஜன்னல்கள் மற்றும் கட்டிட முகப்புகளுக்கான ஆர்க்கிடெக்சுரல் கண்ணாடி, வெப்பத்தைக் குறைக்கும் சோலார் கண்ணாடிகள், சக்தி சேமிப்பை மேம்படுத்தும் லோ-இ கண்ணாடிகள், வாகனங்களுக்கான ஆட்டோமொபைல் கண்ணாடிகள் எனப் பல வகைகளில் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. முழுமையான தானியங்கி தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த வளாகத்தில் உலகத் தரத்திலான தரக் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப பரிசோதனை வசதிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகள், மின்சாரம் மற்றும் எரிசக்தி சிக்கன தொழில்நுட்பங்கள், கண்ணாடி கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நவீன அமைப்புகள் எனப் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, இந்த கண்ணாடி தொழிற்சாலைக்கு வருகை தந்த முதல்வரை, காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பு அமைச்சரும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சருமான எஸ்.பி.கே. தென்னரசு, வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தி. சினேகா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்டோர் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர். முதல்வரின் வருகையையொட்டி சுங்குவார்சத்திரம்–மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
செயின்ட்-கோபைன் தொழிற்சாலையைத் தொடர்ந்து, ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலையிலும் தமிழக முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். கார் உற்பத்திக்கான உதிரி பாகங்களைக் கொண்டு பொருத்தும் பிரிவு, தரம் உறுதிப்படுத்தும் பிரிவு ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். பின்னர், நீண்ட சோதனைப் பாதைக்கான (Long Test Track) புதிய ரக ரெனால்ட் டஸ்டர் வாகனத்தை, அவ்வளாகத்தில் உள்ள தடம் 3 மற்றும் 4 வழியாக சுமார் அரை கிலோமீட்டர் தூரம் தாமாகவே முன்வந்து இயக்கி முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்.
இந்த ரெனால்ட்-நிஸான் கார் உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மேலும், முதலீட்டின் மூலம் தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் சுமார் 2,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அதிகாரிகள் முதலமைச்சரிடம் தெரிவித்தனர். இந்த திடீர் ஆய்வு, தொழில்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதில் அரசின் ஈடுபாட்டை வெளிப்படுத்தியது.

