மனித கழிவை மனிதன் அள்ளும் நிலை மாறும்: பாதாள சாக்கடை திட்டம் இயந்திரமயமாக்கல் – முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்

மனித கழிவை மனிதனே அள்ளும் அவல நிலையை மாற்றும் வகையில், பாதாள சாக்கடை திட்டங்கள் இனி முற்றிலும் இயந்திரமயமாக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று அறிவித்தார். சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களின் போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களின் கீழ், தமிழ்நாட்டில் நிலையான நகர வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான திட்ட அறிக்கைகள் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டு இயக்கத்தின் (CMIUDM) கீழ் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

குடிநீர் வழங்கல் திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் அறிவித்தார். குறிப்பாக, கோயம்புத்தூர் மாநகராட்சியில் தற்போது 58 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மீதமுள்ள 42 வார்டுகளுக்கும் இதே வசதியை ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை ஆற்றை ஆதாரமாகக் கொண்டு, கன்னியாகுமரி நகராட்சி, 17 பேரூராட்சிகள் மற்றும் 5 ஒன்றியங்களில் உள்ள குடியிருப்புகளுக்கும், தாமிரபரணி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆய்வு செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

பாதாளசாக்கடை திட்டங்களில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாளசாக்கடை திட்டம் புனரமைக்கப்படும். மேலும், திருநீர்மலை பகுதியில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் (CMWSSB) இயக்கி வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் கழிவுக் கசடிலிருந்து உயிரி வாயுவை (Bio Gas) பிரித்தெடுத்து, அதை Compressed Bio Gas ஆக தரம் உயர்த்தி வணிகமயமாக்கப்படும். கோயம்புத்தூர், சிவகாசி மாநகராட்சிகள் மற்றும் திருச்செந்தூர் நகராட்சிக்கும் பாதாளசாக்கடை திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகின. திருவொற்றியூரில் உள்ள 31 எம்.எல்.டி. திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். பாதாளசாக்கடை திட்ட கட்டமைப்பின் பராமரிப்பு பணிகளை முற்றிலுமாக இயந்திரமயமாக்க, 102 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும். மேலும், 15 பேரூராட்சிப் பகுதிகளில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

திடக்கழிவுகளை அகற்றும் திட்டங்களிலும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. சென்னை மாநகராட்சியில் உள்ள கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கிடங்குகளில் உள்ள 29 லட்சம் மெட்ரிக் டன் பழைய குப்பைகள் 276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயிரி அகழ்வு (Bio mining) முறையில் அகற்றப்படும். மேலும், ஆவடி, தாம்பரம், கோயம்புத்தூர் மாநகராட்சிகள் மற்றும் 25 நகராட்சிகளிலும் 93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதே திட்டம் செயல்படுத்தப்படும்.

வீடுகள் தோறும் திடக்கழிவுகளை சேகரிக்கும் பணியை எளிதாக்க, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 4,890 முதன்மை சேகரிப்பு வாகனங்கள் உட்பட மொத்தம் 5050 வாகனங்கள் 262 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும். 'வெற்றித் தமிழகம்' திட்டத்தின்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஒரு இலட்சம் எல்.இ.டி (LED) தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

மழைநீர் வடிகால்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகின. சென்னை மாநகராட்சியில் வில்லிவாக்கம், அம்பத்தூர் பகுதிகளில் 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைப்புகள் ஜெர்மன் வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்படும். கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் நகராட்சிகளில் நகர்ப்புர வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும், மழைநீரை வெளியேற்றவும் மேம்பட்ட மழைநீர் வடிகால் வசதிகள் 118 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். மேலும், மழைநீரை உறிஞ்சி நிலத்தடி நீர் வளத்தை உயர்த்தும் நோக்கில் திண்டுக்கல், காரைக்குடி, சிவகாசி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்படும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version