‘இதுதான் சாதாரண மக்களுக்குத் தேவை’ – முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் விஷால் பாராட்டு

முதலமைச்சர் விஜய், மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுமாறு பிறப்பித்த உத்தரவுக்கு நடிகர் விஷால் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். முதலமைச்சராகப் பதவியேற்ற கையோடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு குவிந்து வருகிறது. இந்த அறிவிப்பு குறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில் பேசியிருப்பதாவது: 'தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எனது நன்றி. உங்கள் அரசு இன்று எடுத்துள்ள இந்த முடிவு ஒரு மிக பெரிய சாதனை. கல்வி நிறுவனங்கள், கோயில்கள் போன்ற இடங்களுக்கு அருகில் உள்ள 717 மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டுள்ளீர்கள். இதற்காக உங்களுக்கு மிகவும் நன்றி. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏனெனில், பல பெண் குழந்தைகள் மதுபானக் கடைகளைக் கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. இதனை யாராவது மாற்ற மாட்டார்களா என்று பலமுறை நான் யோசித்துள்ளேன். இப்போது அது நடைமுறைக்கு வந்திருப்பது பாராட்டுக்குரியது. இதுதான் சாதாரண மக்களுக்குத் தேவை. இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அரசுக்கு மதுபானக் கடைகள் மூலம் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான வருமானம் வரும் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அந்த 717 மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது பல மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இது பொதுமக்களுக்கும், பெண்களுக்கும், முதியோர்களுக்கும் ஒரு பெரிய வரமாக அமையும்' என்று விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் விஷால் குறிப்பிட்டிருப்பதாவது: 'பள்ளிகளுக்கு அருகிலுள்ள மதுபானக் கடைகளை மூடுவதாக அறிவித்ததற்கு மிக்க நன்றி. இது ஒரு சிறப்பான நடவடிக்கை. பல பெண் குழந்தைகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக, எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம் ஆர்.கே. நகரில் நடந்தது. அங்கு ஒரு மாணவி, தினமும் மதுக்கடையைக் கடந்துதான் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் கூறியிருந்தார். அவரும், அவரைப் போன்ற எண்ணற்ற பொதுமக்களும் உங்களையும், உங்கள் முடிவையும் மனதாரப் பாராட்டுவார்கள். முதலமைச்சரின் இந்த முடிவின் மூலம், 'மது' எனும் இந்தப் பெரும் தீமையிலிருந்து நிரந்தர விடுதலை கிடைத்துள்ளது' என்று விஷால் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version