மும்பையை அடுத்த பாலாப்பூர் கிராமத்தில், கொண்டைக்கடலையில் கலந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு வாயுவை சுவாசித்ததால், அக்கா-தங்கை என இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ் தேபேகர் என்பவருக்கு ஆரோகி (6 வயது) மற்றும் ஆராத்யா (4 வயது) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இவர் தனது விவசாய நிலத்தில் விளைந்த கொண்டைக்கடலையை, வீட்டில் உள்ள ஒரு அறையில் சேமித்து வைத்திருந்தார். இந்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் அண்டாமல் தடுப்பதற்காக, அதில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துயரச் சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளது. மல்லேஷ் தேபேகர், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள், கொண்டைக்கடலை சேமித்து வைக்கப்பட்டிருந்த அதே அறையில்தான் அன்றிரவு உறங்கச் சென்றனர். அவர்கள் வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி உறங்கியதால், அறையில் இருந்த கொண்டைக்கடலையில் கலந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்திலிருந்து நச்சு வாயு வெளியேறி, அறையிலேயே தங்கியுள்ளது. இதனால், தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் நச்சு வாயுவை சுவாசித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்து வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதில், ஆரோகி மற்றும் ஆராத்யா என்ற இரண்டு பிஞ்சு குழந்தைகள் நிலை குலைந்து மயக்கமடைந்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உடனடியாக இரு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தைகள் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. பூச்சிக்கொல்லி மருந்தின் தீவிர தாக்கத்தால், குழந்தைகள் தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் கருதுகின்றனர். இந்தச் சம்பவம் பாலாப்பூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட மரணமும் நிகழுமா என மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
கொண்டைக்கடலையில் விஷவாயு: அக்கா, தங்கை பலி – அதிர்ச்சியில் கிராம மக்கள்

Senior Reporter
Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை
