சென்னை மக்களே உஷார்! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் 842 கோடி ரூபாய் மதிப்பிலான மறுசீரமைப்பு பணிகளின் காரணமாக, கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் இரவு நேர மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் காரணமாக, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முதலில் அறிவிக்கப்பட்டிருந்த கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை, தினமும் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை, அதாவது சுமார் 5 மணி நேரங்களுக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்படாது. இந்த அறிவிப்பு சென்னை புறநகர் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, வார நாட்களில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5 வரை சில மின்சார ரெயில்கள் முழுமையாகவும், சில பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் இருந்து இரவு 10.20, 11.20, 11.40, மற்றும் 11.59 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கும், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.15 மற்றும் 11.20 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மற்றும் 11 மணிக்கும் கடற்கரை நோக்கி வரும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாற்று ஏற்பாடாக, சில மின்சார ரெயில்களின் புறப்படும் நேரம் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கடற்கரையில் இருந்து இரவு 9.45 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் ரெயில், 9.50 மணிக்கும், இரவு 10.20 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் ரெயில் 10.15 மணிக்கும் இயக்கப்படும். மேலும், ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 7 வரை வார நாட்களில், கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில், குறிப்பாக ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் இருந்து இரவு 10, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் ரயில்களும், திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து இரவு 11 மற்றும் 11.40 மணிக்கும் கடற்கரை வரும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் ரயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மற்றும் 11 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மாற்று ஏற்பாடாக, கடற்கரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் ரயில் 9.50 மணிக்கும், இரவு 9.50 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் ரயில் 10.10 மணிக்கும், இரவு 10.20 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் 10.25 மணிக்கும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களால் இரவு நேர பயணிகளின் சிரமங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
