எம்.ஜி.ஆர் செய்தியாளராக நடித்த ‘சந்திரோதயம்’ – 60 ஆண்டுகள் நிறைவு

ஹாலிவுட் கிளாசிக் படமான 'இட் ஹேப்பன்ட் ஒன் நைட்' மற்றும் அதன் பாதிப்பில் உருவான 'ரோமன் ஹாலிடே' போன்ற படங்களின் கதையை மையமாக வைத்து தமிழில் உருவான திரைப்படம் 'சந்திரோதயம்'. 1966 ஆம் ஆண்டு இதே நாளில் (மே 27) வெளியாகி, இன்றுடன் 60 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எம்.ஆர்.ராதா, நம்பியார், பண்டரிபாய், அசோகன், நாகேஷ், மனோரமா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

கே.சங்கர் இயக்கி, ஜி.என்.வேலுமணி தயாரித்த இந்தப் படத்தில், செல்வமணி எஸ்டேட்டின் வாரிசான தேவி (ஜெயலலிதா) தனது நிச்சயதார்த்தத்திற்கு முதல் நாள் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். இதனால் அவமானமடையும் அவரது தந்தை ஜமீன்தார் பொன்னம்பலத்திற்கு (அசோகன்), தேவியை நாளிதழ் நிருபரான சந்திரன் (எம்.ஜி.ஆர்) ரவுடிகளிடமிருந்து காப்பாற்றி, தனது வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். சந்திரன் 'தினக்கவர்ச்சி' என்ற நாளிதழில் பரபரப்பு செய்திகளை வெளியிடும் துரியோதனனிடம் (எம்.ஆர்.ராதா) பணிபுரிந்து வருகிறார். துரியோதனனின் இந்த போக்கை சந்திரன் அடிக்கடி எதிர்ப்பார். புகைப்படக் கலைஞர் ஆழ்வார் (நாகேஷ்) சந்திரனின் நண்பராக இருந்து உதவுகிறார்.

இறுதியில், குடும்பத்தினரின் சம்மதத்துடன் சந்திரன், தேவியை எப்படி திருமணம் செய்து கொள்கிறார் என்பதே கதை. துரியோதனன் தனது தவறுகளை உணர்ந்து, சந்திரனிடம் புதிய நாளிதழைத் தொடங்கச் சொல்லி, அதற்கு 'சந்திரோதயம்' எனப் பெயரிடுகிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்தப் படத்தில், பாரதிதாசன் எழுதிய 'புதியதோர் உலகம் செய்வோம்' பாடலைத் தவிர மற்ற பாடல்களை வாலி எழுதியிருந்தார். 'புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?', 'கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்', 'காசிக்கு போகும் சந்நியாசி', 'எங்கிருந்தோ ஆசைகள்…', 'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ…' போன்ற பாடல்கள் இன்றும் பலரின் விருப்பப் பட்டியலில் உள்ளன.

'புத்தன் ஏசு காந்தி பிறந்தது' பாடலில் எம்.ஜி.ஆருடன் குழந்தைகளும் மழை நீரில் நனைந்து நடிப்பார்கள். குழந்தைகளின் நலன் கருதி, அந்த செயற்கை மழையை வெந்நீர் மழையாக மாற்றிய எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை அக்காலத்தில் பேசப்பட்டது. படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில், உடைந்த டேபிள் லேம்பை வைத்து, அதன் நிழல் மற்றும் ஒளி விளைவுகளைப் பயன்படுத்தி நம்பியாருடன் மோதும் காட்சியை தம்மு அருமையாக படமாக்கியிருந்தார். இந்தப் படம் இனிமையான பாடல்கள், நாகேஷின் நகைச்சுவை, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, ஜெயலலிதா ஆகியோரின் நடிப்பால் இன்றும் பேசப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version