சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர், பெங்களூருவில் இன்று கைது செய்யப்பட்டார். இவர் மீது, தனியார் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் இளம்பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், வேலை வாய்ப்பு தொடர்பாக பி.ஆர்.சுந்தரிடம் உதவி கேட்டதாகவும், அதன் அடிப்படையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பி.ஆர்.சுந்தர் தன்னை வீட்டுக்கு வரவழைத்து அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், இதுகுறித்து அவரது மனைவியிடம் புகார் அளித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த செய்தி வாசிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 29ஆம் தேதி, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாக கூறி பி.ஆர்.சுந்தர் தன்னை அலுவலகத்திற்கு வரவழைத்ததாகவும், அங்கு ஒரு அறையில் சுமார் 3 மணி நேரம் பூட்டி வைத்து பாலியல் தொல்லை அளித்ததாகவும், மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பி.ஆர்.சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தொடர்புடைய பி.ஆர்.சுந்தர், தற்போது பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, பி.ஆர்.சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'உள்நோக்கம் கொண்ட புகார்களுக்கும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் நான் பலியாகிவிட்டேன். காலம் மட்டுமே எல்லா உண்மைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும். அதுவரை, வெறுப்பாளர்களும் சில ஊடகங்களும் மகிழட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட தொழிலதிபர் பி.ஆர்.சுந்தரை சென்னைக்கு அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

