விலைவாசி உயர்வு & தட்டுப்பாடு: பிரேமலதா கண்டனம்!

தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலை, மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. ஒரு பக்கம் விலை உயர்வு, மறுபக்கம் டீசல், பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை நீடித்தால், மக்களின் இயல்பான வாழ்க்கை முறையும், அன்றாட வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், தற்போதைய சூழலில் மீண்டும் ஒரு 'லாக்டவுன்' போன்ற அவசர நிலை உருவாகுமோ என்ற அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பது உறுதி என்பதால், பொதுமக்கள் மிகுந்த கவலையிலும் பதற்றத்திலும் உள்ளனர்.

'உரலுக்கு ஒரு புறம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி' என்ற பழமொழிக்கிணங்க, ஒரு பக்கம் விலைவாசி உயர்வு மற்றும் மற்றொரு பக்கம் தட்டுப்பாடு ஆகிய இரட்டை சுமைகள் மக்களின் வாழ்வை பெரிதும் சிரமப்படுத்தி வருகின்றன. இந்த நிலை மக்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.

எனவே, தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக தலையிட்டு பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். தற்போது நிலவி வரும் தட்டுப்பாட்டையும் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அன்றாட தேவைகள் பாதிக்கப்படாத வகையில், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தீர்வுகளை அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும். பொதுமக்கள் மீது ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார சுமையை நிரந்தரமாக குறைக்கும் வகையில் அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version