பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி, தனது முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு அளித்துவிட்டு, இரண்டாம் நிலை வீரர்களைக் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இந்த அணி தேர்வை பாகிஸ்தான் ரசிகர்கள் பெரிதும் விமர்சித்துள்ளனர்.
2026 ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அழைக்கவில்லை. அவர்கள் ஐபிஎல் தொடரில் ஆடுவதை உறுதி செய்யும் வகையில் இரண்டாம் கட்ட வீரர்களைக் கொண்ட அணி பாகிஸ்தான் செல்ல உள்ளது. 19 வயது வீரர் ஒருவருக்கும் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்திரேலிய அணி அறிவிப்பை பார்த்து பாகிஸ்தான் ரசிகர்கள் ஏமாற்றத்தில் புலம்பியும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பை குற்றம் சுமத்தியும் வருகின்றனர்.
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் வரும் மே 30-ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. ஆனால், மே 31-ம் தேதி ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) ஆகியோர் ஐபிஎல் பிளே-ஆப் சுற்றில் விளையாடுவதால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரவுள்ள டெஸ்ட் போட்டிகளைக் கருத்தில் கொண்டு மிட்செல் ஸ்டார்க்கிற்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த மிட்செல் மார்ஷ் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட புதிய முகங்களுடன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 19 வயதான ஆலி பீக் போன்ற இளம் வீரர்களுக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. பணிச்சுமை மேலாண்மை (Workload Management) காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

