வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வேலி அமைக்க நிலம் ஒதுக்கீடு: மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு

கொல்கத்தா: வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) நிலத்தை மாற்றித் தர தனது அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.

இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, “வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு நிலத்தை மாற்றித் தர மேற்கு வங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பணிகள் இன்றிலிருந்து தொடங்குகின்றன; 45 நாட்களுக்குள் நிறைவுபெறும். இது எனது அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

மத்திய அரசின் முதன்மைத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ சுகாதாரத் திட்டம் மற்றும் மத்திய அரசின் வேறு பல திட்டங்களையும் மாநிலத்தில் அமல்படுத்தவுள்ளோம். தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த வாக்குறுதியின்படி, பள்ளி வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பை ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய மற்றும் மாநிலப் பணிப்பிரிவுகளின் கீழ் வரும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பயிற்சிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, தலைமைச் செயலாளருக்கு அமைச்சரவை அதிகாரம் அளித்துள்ளது.

முந்தைய அரசு அரசியலமைப்பை மீறி ‘பாரதிய நியாய சம்ஹிதா’ சட்டத்தை அமல்படுத்தவில்லை. தற்போது அச்சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் ஜூன் 2025-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக வெளியிட்ட சுற்றறிக்கையை முந்தைய அரசு புறக்கணித்திருந்தது. தற்போது மேற்கு வங்க அமைச்சரவை, அச்சுற்றறிக்கையை உடனடியாக அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது” என்று அவர் கூறினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version