அண்ணாமலை ராஜினாமா: புதிய அரசியல் பாதை குறித்த கடிதத்தின் முழு விவரம்!

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது ராஜினாமா கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பினால் ஈர்க்கப்பட்டு 6 வருடங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசியலில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டு வரவும், அரசியல் போக்கை மேம்படுத்தவும் தான் விரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார். வசதி படைத்தவர்களுக்கும், சில குறிப்பிட்ட தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் மட்டுமே உரியதாக இருக்கும் அரசியலை மாற்றி, சாமானிய தனி மனிதனுக்கும் உரியதாக மாற்ற வேண்டும் என்பதே தனது எண்ணமாக இருந்ததாக அண்ணாமலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நெடுங்காலமாக பொதுவான அரசியலால் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மக்கள் சோர்வடைந்துள்ளனர் என்றும், தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் மக்களின் மொழியைப் பேசுவதில்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். இதனை மாற்ற முயன்று, பல்வேறு தடங்கல்களைக் கடந்து நியாயமான வெற்றியை அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு தேசியவாதியாக தனது மொழியையும் கலாச்சாரத்தையும் நினைத்து பெருமை கொள்வதாகவும், வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியா அதன் பல்வேறு பிரிவு சமூகங்களின் வலிமை, கண்ணியம் மற்றும் ஊக்கம் ஆகியவற்றினால் கட்டமைக்கப்பட்டது என்பதை உறுதியாக நம்புவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18 மாதங்களாக மூத்த தலைவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் தனக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தன என்பதை அண்ணாமலை நினைவுகூர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசியல் பாதைக்கான தனது சிந்தனைகள் மூலம் மூத்த அரசியல் தலைவர்களைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்றும், அவர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பிறகு, தமிழ்நாட்டைச் சார்ந்த தனது பார்வை அவர்களுடன் ஒத்துப்போகவில்லை என்ற முடிவிற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், நீண்ட சிந்தனைக்குப் பிறகு, அரசியலுக்கு வந்த நோக்கத்தைக் கடைப்பிடிக்க கட்சியில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை விட்டு வெளியேறி, அரசியலுக்கு வந்ததற்கான உண்மையான நோக்கத்தை மறுபரிசீலனை செய்யவும், எதிர்காலத்தில் காற்று எத்திசை நோக்கி அழைத்துச் செல்கிறதோ அத்திசையில் பயணிக்கவும் இதுவே சரியான நேரம் என்று நம்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். எனவே, கட்சியின் அனைத்துக் கட்டமைப்புப் பொறுப்புகளில் இருந்தும் தன்னை உடனடியாக விடுவிக்குமாறும், பா.ஜ.க.வின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து தனது ராஜினாமாவை உடனடியாக ஏற்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளார். அண்ணாமலையின் இந்த புதிய இயக்கம் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நெறிமுறைகள் மற்றும் அரசியலுக்கான மையம் (APJ Abdul Kalam Centre for Ethics and Politics) இந்த புதிய இயக்கத்தின் ஒரு அங்கமாக இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் எனப் பலதரப்பட்ட தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் பண்பாட்டைத் தமிழ்நாட்டில் உருவாக்கவே இத்தகைய வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மையத்தில் முறையாக பயிற்சி வழங்கப்படும் என்றும், பயிற்சி பெற்றவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி மீதான தனது மரியாதையைத் தக்கவைத்துக் கொள்வதாகவும், ஆனால் பாஜகவில் இருந்து ஒரு விஷயத்தை மாற்றுக்கருத்து தெரிவித்தால் அதனை கம்பீரமாக மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக, அதிமுக, தவெக, சீமான், அன்புமணி, ஜிகே வாசன், ஏசி சண்முகம், பாரி வேந்தர், ஜான்பாண்டியன், பிரேமலதா, கிருஷ்ணசாமி, வைகோ உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் பாஜகவையும் தான் ஒரே மாதிரியாகப் பார்ப்பதாகவும், அவர்களது கட்சியின் கொள்கையை அவர்கள் முன்னிறுத்தப் போவதாகவும், தனது இயக்கத்தின் கொள்கையை தான் முன்னிறுத்தப் போவதாகவும், யாருக்கும் போட்டி இல்லை என்றும், தரம் பார்த்து மக்கள் தன்னைத் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் நிற்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயங்களில் பாஜகவை எதிர்க்க அண்ணாமலை தயாராகிவிட்டதாகவும், வரும் காலத்தில் திமுக, அதிமுகவைப் போல் பாஜகவையும் அண்ணாமலை விமர்சனம் செய்வதற்கான சமிக்ஞையை கொடுத்துள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version