3 தமிழர்கள் கொலை: ரூ.1 கோடி இழப்பீடு கோரும் அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாகக் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாகக் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டில், அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்களை கர்நாடக வனத்துறை கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் முறையே ஜகன்னாததொட்டி, மரியமங்கலம், லாசர்தொட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடாத நிலையில், சாக்யா பகுதி வன அலுவலகத்தைச் சேர்ந்த வனக்காவலர்கள் இவர்களைக் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்தக் கொலைகளை மறைப்பதற்காக, அவர்கள் மான் வேட்டையாட வந்ததாகவும், அப்போது வனத்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இது அப்பட்டமான பொய் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். கொல்லப்பட்ட மூவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அணை கட்டும் பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டபோது, தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து, வாழ்வாதாரம் தேடி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் மரியமங்கலம் பகுதியில் குடியேறியவர்கள் ஆவர். மரியமங்கலம் காட்டுப்பகுதியில் மான் வேட்டையாடியதற்கோ, இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்ததற்கோ எந்தவிதமான சான்றுகளும் இல்லை என்றும், கொல்லப்பட்டவர்கள் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம்ராஜ்நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான புட்டரங்கா ஷெட்டி, மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹானூர் சட்டப்பேரவை உறுப்பினர் மஞ்சுநாத் ஆகியோர், அதிகாலை நேரத்தில் என்கவுன்டருக்கான தேவை ஏன் எழுந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்களும் வனத்துறையினரின் இந்தச் செயலைக் கண்டித்துள்ளனர்.

தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வெளியாகி வருவதால், உண்மையைக் கண்டறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த விசாரணையில் உண்மை வெளிவராது என்றும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கர்நாடக அரசுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடமிருந்து தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டை வாங்கித் தர வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version