திமுக ஆட்சியின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை மாநகரம் சீரழிந்துவிட்டதாகவும், இதற்கு அமைச்சர் சேகர்பாபுதான் காரணம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு பாமக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், "முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஈ.பி.எஸ், மு.க.ஸ்டாலின் ஆகியோரை பலமுறை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினோம். அவர்களிடம் அதிகாரம் இருந்தும், ஆட்சி இருந்தும் மனது இல்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திலேயே முதலமைச்சர் விஜய் தைரியமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரை நாம் பாராட்ட வேண்டும். திமுக ஆட்சியில் ஐந்து வருடங்கள் சென்னையை நாசமாக்கி விட்டார்கள். அதற்கெல்லாம் ஒரே காரணம் சேகர்பாபுதான். அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளுமையா? மேயர் பதவி என்பது அதிகாரமிக்க பதவி. ஆனால், மேயர் பிரியா, சேகர்பாபு செயல்படவில்லை. காரில் தொங்கிக்கொண்டு என்ன கலாச்சாரம் இது? அன்றைய முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் காரணமாகத்தான் இன்று சென்னை குப்பையை எரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உலகத்தில் எங்கும் குப்பையை எரிப்பதில்லை. ஆனால், இங்கு இன்சினரேட்டர் மூலம் குப்பையை எரித்து, அதில் இருந்து மின்சாரம் தயாரிப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், குப்பையை எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், டயாக்சின் போன்ற நச்சு வாயுக்கள் வெளியாகி, சுற்றுப்புறத்தில் பரவி குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்தும் அவர்கள் இதைச் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் பிரச்சனை பற்றிய விழிப்புணர்வு இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "இன்றும் கூட சென்னையில் இன்னும் நிறைய செய்ய முடியும். நானும் சென்னையில்தான் வசிக்கிறேன். முன்பு டி.நகரில் இருந்தேன், இப்போது வேறு பகுதிக்கு வந்துவிட்டேன். ஆனால், சென்னையில் இவ்வளவு மாசு, தண்ணீர் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் எனப் பல பிரச்சனைகள் உள்ளன. இதற்கு எங்களிடம் நிறைய தீர்வுகள் உள்ளன. நாங்கள் வாய்க்கு வந்ததை பேசமாட்டோம். விஞ்ஞான முறைப்படி ஆய்வுகள் நடத்தி, ஒவ்வொரு பிரச்சனைக்கும் நாங்கள் தீர்வு கொடுப்போம். சயின்டிஃபிக் சொல்யூஷன்ஸ். யார் வேண்டுமானாலும் கொடுக்கப் போகிறோம். எனவே, தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்" என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

