முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, வங்கி மேலாளரை தாக்கிய சம்பவம் தொடர்பாக, அவரை கைது செய்ய வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறில் உள்ள காந்தி நகர் பகுதியில், எஸ்.பி.ஐ., என்.ஆர்.ஐ., (SBI NRI) வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான கட்டடத்தில் அமைந்துள்ளது. வங்கியின் உள்ளே பழுதடைந்திருந்த மின்தூக்கியை (லிஃப்ட்) சீரமைக்குமாறு கட்டட உரிமையாளரின் உதவியாளரை வங்கி நிர்வாகம் பலமுறை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, வங்கி கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங், இதுகுறித்து கட்டட உரிமையாளரான கயல்விழி அழகிரியிடம் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் தொடர்பாக பேசியபோது, கயல்விழி அழகிரிக்கும் வங்கி மேலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. வாக்குவாதத்தின் போது, கயல்விழி கோபமாகப் பேசிக்கொண்டிருந்த நிலையில், வங்கி மேலாளர் தனது கன்னத்தில் கையை வைத்தபடி அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். இது மேலும் கயல்விழிக்கு கோபத்தை ஏற்படுத்தி, அவர் வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, எஸ்.பி.ஐ RBO-II தலைமை மேலாளர் நமச்சிவாயம், கடந்த ஜூலை 21ஆம் தேதி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பந்தப்பட்டவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.பி.ஐ நிர்வாகம் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புகாரைப் பெற்ற காவல்துறையினர், புகார்தாரர் மற்றும் சம்பவத்தின் சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த நேற்று மாலை காவல் நிலையம் ஆஜரான கயல்விழி அழகிரியிடம், காவல்துறையினர் புகாரின் அடிப்படையிலும், சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்தின் அடிப்படையிலும் சுமார் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பிறகு, கயல்விழி அழகிரி கைது செய்யப்பட்டு, பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், கயல்விழி அழகிரியை கைது செய்ய வலியுறுத்தி, சென்னை அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளையில் ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர்களின் இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

