சமூக வலைதளங்களில் எனது புகைப்படங்கள் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் மார்பிங் செய்யப்பட்டு பரப்பப்பட்டது என்னை மிகவும் பாதித்தது என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.
தனது புகைப்படங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு, ஆபாசமான கருத்துகளுடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது தன்னை மனதளவில் கடுமையாக பாதித்ததாக அவர் கூறியுள்ளார். ஒரு சமயத்தில் உலகம் தனக்கு எதிராக இருப்பதாக உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே கடந்த ஆண்டு அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார்.
தற்போது, தனக்கு 100 கோடி ரூபாய் பணம் கொடுத்தாலும் மீண்டும் சமூக வலைதளங்களில் ஈடுபடப் போவதில்லை என்று ஐஸ்வர்யா லட்சுமி உறுதியாகக் கூறியுள்ளார். ஆன்லைன் தொடர்புகளை விட, மக்களை நேரில் சந்தித்து உரையாடுவதையே தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகிய பிறகே தனக்கு உண்மையான மன அமைதி கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சினிமாவில் வாய்ப்புகளைப் பெறுவதற்காக தனது கொள்கைகளையோ அல்லது தான் எடுத்த முடிவுகளையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். எவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டாலும், கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதே தனது முதல் முன்னுரிமையாக இருக்கும் என்றும், மனநிறைவைத் தரும் படைப்புகளில் மட்டுமே நடிக்க விரும்புவதாகவும் ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

