ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் இடதுகை பேட்ஸ்மேன் செடிகுல்லா அடல், தனது 25-வது பிறந்தநாளில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்து, வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பெல்ஃபாஸ்ட்டில் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில், அவர் இந்த அபாரமான சாதனையை நிகழ்த்தினார்.
இந்த போட்டியில், தனது பிறந்தநாளைக் கொண்டாடிய செடிகுல்லா அடல், வெறும் 120 பந்துகளில் 143 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது பிறந்தநாளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு 2022-ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் டாம் லேதம், தனது 30-வது பிறந்தநாளில் நெதர்லாந்துக்கு எதிராக 140 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை அடல் முறியடித்துள்ளார்.
மேலும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பிறந்த நாளில் எடுத்த அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோரையும் செடிகுல்லா அடல் முந்தி இருக்கிறார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 3-வது இடத்தில் உள்ளார். அவர் 1998-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 25-வது பிறந்தநாளில் 134 ரன்கள் எடுத்திருந்தார். உலக அளவில் தனது பிறந்தநாளில் ஒருநாள் போட்டியில் முதன்முதலில் சதம் அடித்தவர் என்ற பெருமை இந்தியாவின் வினோத் காம்ப்ளி வசம் உள்ளது. அவர் 1993-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார். விராட் கோலியும் 2023-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது 35-வது பிறந்தநாளில் 101 ரன்கள் எடுத்து சதம் விளாசியுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் செடிகுல்லா அடல் தனது அதிரடி ஆட்டத்தில் 17 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களைப் பறக்கவிட்டார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இப்ராகிம் சத்ரானுடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்தார். இது ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் 2-வது விக்கெட்டுக்கான அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
இந்தப் போட்டியில் சத்ரான் 107 ரன்கள் எடுத்தார். மேலும், அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ரன்களைக் கடந்த 3-வது வீரர் என்ற சாதனையைத் தன்வசப்படுத்தினார். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 48 ஓவர்களில் 301 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றி அசத்தியுள்ளது.
செடிகுல்லா அடலின் இந்த மகத்தான சாதனை, கிரிக்கெட் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது பிறந்தநாளையே சாதனையாக மாற்றிய அவரது திறமை பலரையும் கவர்ந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடரையும் கைப்பற்றி, தங்கள் கிரிக்கெட் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.

