அதிமுக அலுவலக விவகாரம்: சி.வி.சண்முகம் விளக்கம்!

சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அடங்கிய மற்றொரு அணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சட்டப்பேரவையில் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்த எடப்பாடி பழனிசாமி, அவர்களை கட்சிப் பொறுப்புகளிலிருந்து அதிரடியாக நீக்கினார்.

இந்த அரசியல் பூசலால் பொதுமக்கள் நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி. நகரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இதுகுறித்து விளக்கமளித்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாங்கள் வரப்போவதாக கூறி காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக செய்திகள் வருவதாக குறிப்பிட்ட அவர், 'நாங்கள் கட்சி அலுவலகத்திற்கு வரவில்லை. இந்த ரத்தம் அதிமுகவின் ரத்தம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கத்தின் தலைமை அலுவலகத்தை நாங்கள் எங்கள் கோவிலாக மதிக்கிறோம். எந்த சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும் எங்கள் கோவிலான தலைமை அலுவலகத்தின் மீது தூசி படுவதற்கோ, எங்களால் சிறிதளவும் பாதிப்பு ஏற்படுவதற்கோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று உறுதியளித்தார்.

மேலும், 'நாங்கள் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என்பதை சட்டப்படி நிரூபித்த பிறகுதான், அங்கே எங்களின் கால் பதியும். ஆகையால், யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. எந்த சூழ்நிலையிலும் அதிமுக அலுவலகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த விட மாட்டோம்' என்றும் அவர் தெரிவித்தார். அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பிரச்சனைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், சி.வி.சண்முகத்தின் இந்த பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version