நடிகை வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு காணொளி மூலம், கடந்த இரண்டு மூன்று மாதங்களாகப் பொதுமக்களுக்கு வழக்கத்தை விட பல மடங்கு அதிக மின்கட்டணம் வந்து கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்திருந்தார். இந்த காணொளியில், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் பயனளிக்கவில்லை என்றும், பழைய முறையிலேயே மின்சாரக் கட்டணக் கணக்கீட்டை மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற சம்பவங்களால் அரசின் மீதான நம்பிக்கை குறைகிறது என்றும் நடிகை வைஷாலி காரசாரமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த காணொளி இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியதைத் தொடர்ந்து, மின்வாரிய சிறப்பு அதிகாரிகள் குழு உண்மைத் தன்மையைச் சரிபார்க்க நடிகை வைஷாலியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரணை நடத்தியது. அப்போது, அவரது மின் இணைப்பு எண் மற்றும் முகவரியைக் கேட்டறிந்த அதிகாரிகள், நேரடியாக ஆய்வு செய்ய முயன்றனர். ஆனால், நடிகை வைஷாலி விவரங்களை அனுப்பி வைப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்ததாகவும், அதன் பின்னர் மின்வாரிய அதிகாரிகள் பலமுறை தொடர்புகொண்டும் அவர் அழைப்பை ஏற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின்சார வாரியம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. மாநிலம் முழுவதும் கணக்கீட்டில் முறைகேடுகள் உள்ளதா என 3.74 லட்சம் மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், வெறும் 0.75% மின் இணைப்புகளில் மட்டுமே கட்டண வேறுபாடுகள் கண்டறியப்பட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருவதாகவும் மின்வாரியம் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மின் பயன்பாடு அதிகரித்ததே தவிர, மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், இது தொடர்பாகப் பரவும் தவறான வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

