நடிகர் ராஜ்கிரன் தனது சிறுவயதில் பள்ளி ஆசிரியரிடம் பெற்ற ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் 1960-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்தபோது நடந்த இந்த சம்பவம், அவரது வாழ்வில் ஒரு முக்கிய பாடமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வகுப்பு ஆசிரியர் சுப்ரமண்யன் வகுப்பறைக்குள் நுழைந்தபோது, ராஜ்கிரன் தனது நண்பரை 'மாப்ளே' என்று அழைத்துள்ளார். இதை தவறாகப் புரிந்துகொண்ட ஆசிரியர், ராஜ்கிரனை வகுப்பறைக்குள் தெருவில் பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்று கண்டித்து, பிரம்பால் நான்கு அல்லது ஐந்து அடிகள் அடித்துள்ளார். பெற்றோரிடம்கூட அடிவாங்காத ராஜ்கிரனுக்கு, நண்பர்கள் முன்னிலையில் கிடைத்த இந்த தண்டனை மிகுந்த வேதனையையும் அவமானத்தையும் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், சில மாணவர்கள் 'அவன் பேரே மாப்ளே தான் சார்' என்று ஆசிரியரிடம் மெதுவாகக் கூறியுள்ளனர். ஆசிரியர் வருகைப் பதிவை எடுக்கத் தொடங்கியபோது, 'மாப்பிள்ளை ஆலிம்' என்ற பெயரை வாசித்தபோது, அந்த மாணவர் 'Present Sir' என்று பதிலளித்ததும், தான் செய்த தவறை ஆசிரியர் உணர்ந்ததாக ராஜ்கிரன் கூறியுள்ளார்.
அனைவரின் வருகைப் பதிவையும் முடித்த பிறகு, ஆசிரியர் மீண்டும் ராஜ்கிரனை அழைத்து, பிரம்பை அவரது கையில் கொடுத்து, 'நான் தவறு செய்துவிட்டேன்… என்னை அடிடா' என்று கூறியுள்ளார். 'நீ நண்பனின் பெயரைத்தான் கூப்பிட்டிருக்கிறாய். நான் தவறாக புரிந்துகொண்டு உன்னை தண்டித்துவிட்டேன். அந்த தவறுக்கான தண்டனையை நான் அனுபவிக்க வேண்டும்' என்று ஆசிரியர் கூறிய வார்த்தைகள் ராஜ்கிரனின் மனதை உலுக்கியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில் ஆசிரியரை அடிக்க மனம் வராமல், பிரம்பை மேசையின் மீது வைத்துவிட்டு அமைதியாக நின்றதாகவும், தன்னை அடித்தபோது அழாத தனது கண்களில், ஆசிரியரின் மனமார்ந்த வருத்தத்தையும் மன்னிப்பு கேட்கும் உயர்ந்த பண்பையும் பார்த்த பிறகுதான் கண்ணீர் வந்ததாகவும் ராஜ்கிரன் உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஆசிரியரின் கண்களிலும் கண்ணீர் தெரிந்ததாகவும், வார்த்தைகளால் சொல்ல முடியாத மனிதநேயப் பாடத்தை அந்த தருணம் கற்றுக்கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாடமாக அமைந்ததாகக் கூறியுள்ள ராஜ்கிரன், 'ஒருவர் தவறு செய்துவிட்டால், அதை உணர்ந்து மனதார வருந்த வேண்டும். அந்த தவறால் பாதிக்கப்பட்டவரிடம் நேர்மையாக மன்னிப்பு கேட்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் மன்னித்தால்தான் இறைவனும் நம்மை மன்னிப்பான் என்ற வாழ்க்கை நெறியை எனக்கு கற்றுக்கொடுத்தவர் என் ஆசிரியர் சுப்ரமண்யன் ஐயா' என்று நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, 'என் மரியாதைக்குரிய ஆசிரியர் சுப்ரமண்யன் ஐயா இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் வாழ்க்கையில் எப்போதாவது, எங்கேயாவது அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கம் மட்டும் இன்னும் என் மனதில் இருக்கிறது' என்று ராஜ்கிரன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார். தவறை ஒப்புக்கொண்டு மாணவனிடமே மன்னிப்பு கேட்கத் தயங்காத ஒரு ஆசிரியரின் உயர்ந்த மனிதநேயத்தையும், அந்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மனதில் சுமந்து வரும் ஒரு மாணவனின் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தும் இந்த பதிவு, சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

