தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் கடுமையாகக் குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள செய்தி மிகுந்த கவலையளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இந்த நிலை நீடிப்பதாகவும், சாதாரண நுகர்வோரும் முகவர்களும் இதனால் அன்றாடம் அவதியுற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆவின் நிர்வாகம் எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்று உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறி தப்பித்துக் கொள்ள முயல்வதை விஜய் அரசு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் அதிகக் கொழுப்பில்லா இதர சத்துகள் (SNF) நிறைந்த பாலுக்கு லிட்டருக்கு ₹50 வரை வழங்குகின்றன. ஆனால், ஆவின் நிர்வாகம் வெறும் ₹35 மட்டுமே வழங்குவதே பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு மாறுவதற்கும், இதன் மூலம் ஆவினில் பால் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் முதன்மைக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தச் செயலால், விவசாயிகளையும், ஏழை எளிய மக்களையும் ஒரே நேரத்தில் தவெக அரசு தவிக்கவிட்டுள்ளது என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை ஆவின் நிர்வாகம் உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், பால் கொள்முதலைத் தடையின்றித் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பொதுமக்கள் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைப்பதை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப் போக்கையும், உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் பாஜக மாநில தலைவர் கடுமையாகச் சாடியுள்ளார். மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தட்டுப்பாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

