சென்னை: 'அதிரடி' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், தனக்கு வந்த ஒரு திரைப்பட வாய்ப்பை ஏன் மறுத்தார் என்பதை மனம் திறந்து பேசியுள்ளார்.
இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில் 'அதிரடி' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் தயாரிப்புப் பணிகளை பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற 'அதிரடி' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில், படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக சஞ்சு சாம்சன் பங்கேற்றார். மேடையில் பேசிய அவர், "சினிமா நிகழ்வில் கலந்துகொள்வது எனக்கு ஒரு புதிய அனுபவம். நண்பர்களின் அழைப்பை ஏற்காமல் இருக்க முடியாது. இந்தப் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், அது மிகச் சிறிய கதாபாத்திரம் என்பதால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். நான் நடித்தால், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும் அவர், "எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரங்கள் பொருந்தும் என்பதை இயக்குநர்கள் தான் முடிவு செய்வார்கள். என் நண்பர் பசில் ஜோசப் எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்தாலும், வேலை என்று வந்துவிட்டால் மிகவும் சீரியஸாக இருப்பார். இரவு உணவிற்கு அழைத்தால் கூட, முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும் என்பார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கான அட்டவணையுடன் செயல்படுபவர்" என்றும் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.