மகாராஷ்டிரா மாநிலம் உல்லாஸ்நகரில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள கோவிலுக்குள் நுழைய உள்ளூர் சாதி பஞ்சாயத்து தடை விதித்திருந்தது. இந்நிலையில், நேற்று கோவில் விருந்தின் போது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தடையை மீறி கோவிலுக்குள் நுழைந்துள்ளார். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஆத்திரமடைந்த கும்பல் கம்பிகள் மற்றும் தடிகளுடன் அந்த இளைஞரின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. வீட்டில் இருந்த ஆண்களை தாக்கியதோடு மட்டுமல்லாமல், பெண்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, வழியிலேயே அவரை ஒரு கும்பல் வழிமறித்துள்ளது. அந்தப் பெண்ணின் உடைகளைக் கிழித்து, அரை நிர்வாணமாக்கி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், இந்த ஊர்வலத்தின் போது, வழியில் இருந்தவர்களின் கால்களிலும் விழுந்து கும்பிடுமாறு அவரை அந்தக் கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பலரும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, சிலர் மொபைல் போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரிலும், வைரலான வீடியோக்களின் அடிப்படையிலும் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, இதில் 2 பெண்களை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.