தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, அதிமுகவில் தற்போது ஒரு பிளவு நிலைமை ஏற்பட்டுள்ளது. சட்டமன்றக் கட்சித் தலைவர் யார் என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. முதலாவது தரப்பினர் எடப்பாடி பழனிசாமியைத் தலைவராகக் குறிப்பிடுகின்றனர். மற்றொரு தரப்பினர் எஸ்.பி.வேலுமணியை சட்டமன்றத் தலைவராகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த இரண்டு தரப்பினரும் சபாநாயகரிடம் தனித்தனி கடிதங்களை அளித்துள்ளனர்.
அதிமுகவின் கொறடா யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கே உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் சபாநாயகர் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளார். ஏனெனில், இரு தரப்பினரும் தங்களுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துக்களைப் பெற்று கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தரப்பு அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தங்களுக்கே இருப்பதாகக் குறிப்பிட்டு கடிதம் கொடுத்துள்ளது. அதேபோல், எஸ்.பி.வேலுமணி தரப்பும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தங்களுக்கே இருப்பதாகக் கையெழுத்துப் பெற்ற கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளார். இதனால், இரு கடிதங்களிலும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சூழலில், சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவே சட்டசபையில் அதிமுகவின் உண்மையான தலைமை யார் என்பதைத் தீர்மானிக்கும். ஆனால், சபாநாயகர் எப்போது, என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இது அவருடைய தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது. இந்த விவகாரம் குறித்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கமளித்தார்.
அப்போது செய்தியாளர்கள் அதிமுக கொறடா விவகாரம் குறித்துக் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த சபாநாயகர், “அதிமுக கொறடா விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு என இரு தரப்பிலும் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இரு தரப்பு மனுக்களும் கவனமாக ஆய்வு செய்யப்படும். இந்த விவகாரம் தொடர்பாக உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.