ஐரோப்பிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, அங்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை போற்றும் வகையில், இளம் கலைஞர்கள் நடத்திய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்று மகிழ்ந்தார்.
பின்னர், நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் சுமார் 40 நிமிடங்கள் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ந்து வரும் லட்சியங்கள் குறித்தும், அதன் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். 'இந்தியா பெரிய கனவுகளைக் காண்கிறது. இந்திய இளைஞர்கள் வானையே எட்ட துடிக்கிறார்கள். மாற்றம் மட்டும் போதாது, சிறப்பானதும், அதிவேகமானதும் வேண்டும் என இன்றைய இந்தியா எண்ணுகிறது. இதனால், இந்தியர்களின் எல்லையற்ற லட்சியங்களுக்கு ஏற்ப, அவர்களின் முயற்சிகளும் எல்லையற்றதாக மாறி வருகின்றன' என்று அவர் குறிப்பிட்டார்.
'இன்றைய இந்தியா, முன்னெப்போதும் இல்லாத ஒரு மாற்றத்தின் காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில், உலகின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியா நடத்தியது. இதற்கு முன்னதாக, ஜி20 மாநாட்டையும் இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல, இதுவே இன்றைய இந்தியாவின் அடையாளமாக மாறிவிட்டது' என்று பிரதமர் மோடி கூறினார்.
'இந்தியாவின் லட்சியங்கள் இனி அதன் எல்லைகளுக்குள் மட்டும் அடங்கி இருக்காது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கும், உலகளாவிய உற்பத்தி மையமாக திகழ்வதற்கும், பசுமை ஆற்றல் துறையில் முன்னணி நாடாக உருவெடுப்பதற்கும், உலகின் வளர்ச்சி இயந்திரமாக செயல்படுவதற்கும் இந்தியா விரும்புகிறது. நமது ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு மற்றும் விண்வெளி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகின்றன. ஆராய்ச்சி மற்றும் ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் மேலும் விரிவடைந்து வருகிறது. இந்த லட்சியங்களை நோக்கிய இந்தியாவின் பயணம், அதன் ஜனநாயகத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது' என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.