தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள தளபதி விஜயை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, கடந்த 10-ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜயை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், முதலமைச்சர் விஜய், மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த ஐந்து நாட்களாக தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைகளிலும் ஈடுபட்டிருந்தார்.
இந்த சூழலில், மாநிலங்களவை உறுப்பினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், முதலமைச்சர் விஜயை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தனது பதிவில், 'பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்' என்றும் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு, திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.