மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து வழக்கு விசாரணை முடியும் வரை, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்துவதாக நடிகர் ரவி மோகன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தனது நெருங்கிய தோழி கெனிஷா சென்னையை விட்டு வெளியேறுவதாக அறிவித்ததை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்தபோது வெளியிட்டுள்ளார்.
"தேவையில்லாத அவமானங்களை இனிமேலும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. எனது குடும்பத்தினரைக் கொச்சைப்படுத்தினாலோ, கேலி செய்தாலோ நான் அமைதியாக இருக்க மாட்டேன். குறிப்பாக, எனது குழந்தைகள் மீது நான் வைத்திருக்கும் பாசத்தை யாரும் கேள்விக்குட்படுத்த வேண்டாம். என் குழந்தைகளைக்கூட என்னைப் பார்க்க விடாமல் தடுக்கிறார்கள்" என ரவி மோகன் உருக்கமாகக் கூறினார்.
"விவாகரத்து வழக்கு முடியும் வரை நான் எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை. எனது படங்கள் எதுவும் இனி திரைக்கு வராது. அமைதியாக இருந்த என்னை சிலர் வேண்டுமென்றே சீண்ட முயற்சிக்கிறார்கள். நான் நடித்த 95% படங்கள் வெற்றி பெற்றுள்ளன. என்னை விமர்சிப்பவர்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.
"பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல படங்களில் நான் நடித்துள்ளேன். எனது சினிமா வாழ்க்கை தனி, தனிப்பட்ட வாழ்க்கை தனி. ஆனால், இப்போது என் குடும்பம் தான் முக்கியம்" என அவர் தனது பேட்டியை நிறைவு செய்தார்.